போட்டிபோட்டு சாப்பிட்டு தீர்த்த மக்கள்.. கேரள இல்லத்தில் 45 நிமிடங்களில் விற்று தீர்ந்த மாட்டிறைச்சி
டெல்லி: மாட்டிறைச்சி சர்ச்சை காரணமாக, இன்று டெல்லி கேரள இல்லத்தில், மாட்டிறைச்சி 45 நிமிடங்களில் சாப்பிட்டு தீர்ந்து போனது.
டெல்லியில், உள்ள கேரள இல்லத்தில், மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக போனில் வந்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு எருமை மாட்டுக்கறி பரிமாறப்பட்டது தெரியவந்தது. இருப்பினும் மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மாட்டுக்கறி விற்பனை நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தை கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடுமையாக எதிர்த்தார். டெல்லியில் கேரள எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாட்டிறைச்சி மீண்டும் பரிமாறப்படுகிறது.
இன்று மதியம், மாட்டுக் கறி, மாட்டு ஃப்ரை, கேரள இல்லத்தில் தயாரானது. ஆனால் 45 நிமிடங்களிலேயே அவை சாப்பிட்டு தீர்ந்துவிட்டது. எனவே சோல்ட்அவுட் என்று போர்டு மாட்டப்பட்டது. கேரள இல்லத்தில் சாப்பிட்ட மலையாளிகள், வேண்டுமென்றே மாட்டுக்கறியை குறிப்பாக ஆர்டர் செய்து சாப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு பசு இறைச்சியல்ல, எருமை மாட்டுக்கறிதான் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.