நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு!
நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
டெல்லி: நெல் மற்றும் துவரம் பருப்புக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நெல், பருப்பு உள்ளிட்டவற்றின் ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சாதாரண நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தி, ரூ.1,750 ஆக நிர்ணயம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
முதல் தர நெல்லுக்கான குறைந்த பட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.220 உயர்த்தி ரூ.1,770 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ஒன்றரை மடங்கு உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.275 ரூபாய் உயர்த்தி ரூ. 1700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.