ராமர் பாலத்தை தொடாமல் சேது சமுத்திர திட்டம் வருகிறது: உச்சநீதிமன்றத்தில் சு.சுவாமி தகவல்
டெல்லி: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற தன்னுடைய மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவை சேர்ந்தவருமான, சுப்பிரமணியசாமி, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சுப்பிரமணிய சாமி ஆஜரானார். அப்போது அவர், தற்போது மத்திய அரசு முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ராமர் பாலத்துக்கு எவ்வித சேதமும் விளைவிக்காமல் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளதாக கூறினார்.
இதற்கு நீதிபதிகள் ராமர் பாலத்தை தொடாமல் இந்த திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முன்வந்துள்ளது குறித்து உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுப்பிரமணிய சாமி தனக்கு கிடைத்த உறுதியான தகவல்படி இதை கூறுவதாகவும், தான் கூறுவது சரியா, என்பதை மத்திய அரசிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரி தான் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவின் மீது மத்திய அரசு இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை. இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனு விரைவில் விசாரணைக்கான பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தனர்.