எனக்கு எதிராக வேலை செய்யும் 'சண்டிகர் லாபி..': கொந்தளிக்கும் வி.கே.சிங்
வி.கே.சிங் பதவி வகித்த காலத்தில் சிறப்பு உளவுப் பிரிவை உருவாக்கி ராணுவ நிதியை பயன்படுத்தி ஜம்மு காஷ்மீர் அரசை கவிழ்க்க முயற்சித்தார், பிக்ரம் சிங் ராணுவ தலைமை தளபதியாவதை தடுக்க முயற்சித்தார் என்பதுதான் லேட்டஸ்ட் சர்ச்சை.
ஹரியானாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாலேயே இப்படி அவதூறுகள் பரப்புகின்றனர் என்று பாஜக கூறியது.
இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள வி.கே.சிங், ராணுவ நடைமுறைகளைப் பற்றி தெரியாதவர்களே இப்படி அவதூறு பரப்புகின்றனர். சண்டிகரைச் சேர்ந்த லாபி ஒன்றுதான் தமக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புகிறது.
குறிப்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர், ராஜ்யசபா பதவி மீது ஆசை வைத்திருக்கிறார். அதற்காகவே என்னைப் பற்றி அவதூறு கட்டுரைகளை எழுதி வருகிறார். நான் பாரதிய ஜனதா கட்சியில் சேரவே இல்லை. நாட்டில் ஊழல் இருக்கக் கூடாது என்றுதான் கருதுகிறேன்.
எனது பதவி காலத்தில் நிகழ்ந்தவை பற்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளி வருமேயானால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் என்றார்.