பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டவர் மாடுகளை கடத்தினார்.. குற்றப்பத்திரிகை தகவலால் அதிர்ச்சி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாவலர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டவர் மீதே, பசுக்களை கடத்தியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு பெஹ்லு கான் என்பவர் பசு பாதுகாவலர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜஸ்தான் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில் பெஹ்லு கானும் அவரது இரு மகன்களும் ஆட்சியர் அனுமதியின்றி பசுக்களை சட்டவிரோதமாக கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஹ்லு கானின் மகன்கள் மீது 5, 8 மற்றும் 9 பிரிவுகளின் கீழ் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதே நேரத்தில் இறந்தவர் மீது ராஜஸ்தான் போவின் விலங்குகளின் 6 வது பிரிவின் ( (படுகொலை மற்றும் தற்காலிக இடம்பெயர்வு அல்லது ஏற்றுமதியை கட்டுப்படுத்துதல்) சட்டம், 1995 கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பெஹ்லு கான் இறந்து விட்டதால் அவர் மீதான வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஆனால் அவரது மகன்கள் இர்ஷத் மற்றும் ஆரிஃப் மீதான வழக்கு தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞரான உகும்சந்த், பசு கடத்தியவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பெஹ்லு கான் மகன்கள் மீது பசுக்களை சட்ட விரோதமாக கடத்தியதாக குற்றப்பத்திரிகையில் புகார் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி கடத்தல் பசுக்களுடன் உதவி ஆய்வாளர் தாமோதர், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை பிடித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பெஹ்லு கான் என்பவர் தமது மகன்களுடன் ஜெய்பூர் கால்நடை சந்தையில் வாங்கிய மாடுகளை, சொந்த மாநிலமான அரியானாவிற்கு வாகனத்தில் வைத்து கொண்டு சென்றார். டெல்லி-ஆல்வார் நெடுஞ்சாலையில் ராஜஸ்தானின் பெஹ்ரர் அருகே, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில குண்டர்கள் அவரது வாகனத்தை வழி மறித்தனர்.
வாகனத்தில் இருந்த பெஹ்லு கான் மற்றும் அவரது இரு மகன்களை மிக கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த பெஹ்லு கான் இரு நாள் தீவிர சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். பெஹ்லு கான் மற்றம் அவரது மகன்கள் சரமாரியாக தாக்கப்படும் காட்சி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது
இந்த வழக்கில் 2 முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. ஒன்று பெஹ்லு கானை தாக்கிய நபர்களுக்கு எதிராகவும் மற்றொன்று மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி கால்நடைகளை கடத்தியதாக பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்களுக்கு எதிராக பதியப்பட்டது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை இரண்டாவது முதல் தகவல் அறிக்கையின் மேல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இறந்து போன பெஹ்லு கானின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பது, அவரது உறவினர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.