ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு.. புலனாய்வு பிரிவு திடுக் தகவல்
Recommended Video
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.
இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். இதன்காரணமாக பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.
பணத்தட்டுப்பாடு
இதனை தொடர்ந்து புதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இதுவரை நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.
கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு
இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய பரிமாற்றம்
இதுகுறித்து புலனாய்வு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிந்தைய நிதியாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றமும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவு பிடிபட்டுள்ளது
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முந்தைய நிதியாண்டில் (2015-16) 4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. ஆனால் 2016-17 நிதியாண்டில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன என்றும் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
400 மடங்கு அதிகம்
இதேபோல், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் 2015-16 நிதியாண்டை விட, 2016-17 நிதியாண்டில் 400 மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையால் அதிர்ச்சி
ஏற்கனவே பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் புலனாய்வு பிரிவின் இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.