கெஜ்ரிவால் பிரதமராக பொது மக்கள் விரும்புகின்றனர்: ஆம் ஆத்மி கட்சி
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமராக வர பொது மக்கள் விரும்புவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவோடு டெல்லியில் ஆட்சி அமைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. கட்சி ஆரம்பித்த ஓராண்டுக்குள் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு மக்களிடம் நல்லாதரவைப் பெற்றுள்ளது இக்கட்சி.
தற்போது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்து செயல் பட்டு வருகிறது அக்கட்சி. இந்நிலையில், தற்போது டெல்லியின் முதல்வராக இருக்கும் கெஜ்ரிவாலை இந்தியாவின் பிரதமராக அமர வைக்க பொதுமக்கள் விரும்புவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவர் கோபால் ராய் தெரிவித்துள்ளதாவது :-
பிரதமர்....
கெஜ்ரிவால் பிரதமராக விரும்பவில்லை. ஆனால் பொது ஜனம் விரும்புகிறது. அவர்களில் ஒருவராக இருப்பவர் பிரதமராக வர வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக உள்ளது.
மக்கள் விருப்பம்....
என்னுடைய விருப்பம், யோகேந்திர யாதவ் அல்லது கெஜ்ரிவால் ஆகியோரது விருப்பம் தேவையில்லை. நாடு என்ன விரும்புகிறது என்பதே கருத்தாகும்.
நம்பிக்கை....
அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர் பிரதமராக வர பொது மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர் மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இலக்கு....
டெல்லியைத் தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இலக்கு நிர்ணயித்து தனது கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஆம் ஆத்மி ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தக்கது.