மியான்மரில் பிறந்து குஜராத் முதல்வர் அரியாசனம் ஏறிய விஜய் ரூபானி.. சுவாரஸ்ய பிண்ணனி
குஜராத் தேர்தலில் பா.ஜ.க வென்றதை அடுத்து விஜய் ரூபானி இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
அகமதாபாத் : குஜராத்தில் ஆறாவது முறையாக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வென்று இருக்கிறது. இதையடுத்து விஜய் ரூபானியே இந்த முறையும் முதல்வராக பா.ஜ.க தலைவர்களால் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பா.ஜ.க.,விற்கு காங்கிரஸ் கடும் போட்டியைக் கொடுத்தது காங்கிரஸ். அதோடு பட்டேல் சமுதாய மக்களின் எதிர்ப்பு, தலித் மக்களின் எதிர்ப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி அறிமுகத்தால் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகிய காரணிகளும் பா.ஜ.க.,விற்கு கடும் எதிர்ப்பை மக்களிடத்தில் ஏற்படுத்தி இருந்தது.
இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி, மொத்தமுள்ள 182 இடங்களில் பா.ஜ.க 99 இடங்களைப் பிடித்து அங்கு ஆறாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்று உள்ளது. இதனிடையே பா.ஜ.க தலைவர்கள் யாரை அடுத்த முதல்வராக்கலாம் என்று கலந்து ஆலோசித்தனர். கூட்ட முடிவில் மீண்டும் குஜராத் முதல்வராக விஜய் ரூபானியே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான குழு அறிவித்து உள்ளது. துணை முதல்வராக மீண்டும் நிதின் பட்டேலே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
விஜய்ரூபானி பிண்ணனி
60 வயதான விஜய் ரூபானி, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவர். 1956ம் ஆண்டு இன்றைய மியான்மர் நாட்டில் இருக்கும் யங்கூன் பகுதியில் பிறந்தவர். 1960களில் அப்போதைய பர்மாவில் ஏற்பட்ட அரசியல் பிரச்னைகளால் அவரது குடும்பம் ராஜ்கோட்டிற்கு இடம் பெயர்ந்தது. ராஜ்கோட்டில் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும்போதே ஆர்.எஸ்.எஸ் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை அந்த இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார்.
படிப்படியான அரசியல் வளர்ச்சி
பள்ளிப்படிப்புக்கு பிறகு இளங்கலை படிப்பும், அதன் பின்னர் வழக்கறிஞர் படிப்பும் படித்து முடித்தார். ஜெயின் பனியா சமூகத்தை சேர்ந்த இவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவராக இருந்ததால், 1971ம் ஆண்டு பா.ஜ.க தொடங்கப்பட்ட காலத்திலேயே அதன் உறுப்பினர் ஆனார்.1987ம் ஆண்டு முதல் 1996 வரை ராஜ்கோட் நகராட்சி உறுப்பினர், சாக்கடை அமைக்கும் குழு தலைவர், நிதிக்குழு உறுப்பினர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்து வந்த விஜய் ரூபானி, 1996ம் ஆண்டு ராஜ்கோட் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குஜராத் பா.ஜ.க அமைப்பு செயலாளர்
குஜராத் முதல்வராக கேஷூபாய் பட்டேல் ஆட்சியில் இருந்தபோது அவரின் நன்மதிப்பை பெற்றதால், 2006 ஆண்டு குஜராத் சுற்றுலாத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அதே சமயம் குஜராத் மாநிலத்திற்கான ராஜ்யசபா எம்.பி., ஆகவும் 2012ம் ஆண்டு வரை பணியாற்றினார். மோடியின் ஆட்சிக்காலத்தின் குஜராத் பா.ஜ.க.,வின் அமைப்புச் செயலாளராக நான்கு முறை பதவி வகித்தார். 2014ம் ஆண்டு ராஜ்கோட் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வஜூபாய் வாலா, கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
அதனால் காலியான அவரது சட்டமன்ற தொகுதியில் மோடி மற்றும் அமித் ஷாவின் பரிந்துரையால் வேட்பாளராக களமிறங்கிய விஜய் ரூபானி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பின் குஜராத் முதல்வராக இருந்த அனந்தி பென் பட்டேல் அமைச்சரவை விரிவாக்கத்தில் போக்குவரத்து, குடிநீர் வழங்கல், தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய் துறைகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார் விஜய் ரூபானி.
இரண்டாவது முறையாக தேடி வந்த பதவி
பட்டேல் இன மக்களின் தொடர் போராட்டங்களையும், நிர்வாக ரீதியான பிரச்னைகளையும் சமாளிக்க முடியாமல் அனந்திபென் பட்டேல் திணறியபோது, யாரை முதல்வராக்கலாம் என்கிற பேச்சு எழுந்தது. அப்போது பா.ஜ.க தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரின் நன்மதிப்பை பெற்றிருந்தததால், உடனடியாக முதல்வராக கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார் விஜய் ரூபானி. கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் பா.ஜ.க.,விற்கு இந்த முறை வெற்றி வாய்ப்பை பெற்றுக்கொடுத்ததனாலும், முக்கிய தலைவர்களின் நம்பிக்கையை பெற்றவர் என்பதனாலும் மீண்டும் அவருக்கே இந்த முறையும் முதல்வர் வாய்ப்பை பா.ஜ.க மேலிடம் வழங்கி உள்ளது.
விஜய்க்கு நம்பகமாக நிதின்
துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள நிதின் பட்டேலும் ஆரம்பகாலத்தில் இருந்தே பா.ஜ.க., உறுப்பினர். அரசியலுக்கு வருவதற்கு முன் தேங்காய் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். இவரும் நாடளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர். குஜராத் அரசில் சாலை, மக்கள் நலன், மருத்துவம், தொழிலாளர், குடும்ப நலன், நிதி உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்து உள்ளார். விஜய் ரூபானிக்கு மிகவும் நம்பிக்கையானவராக செயல்பட்டதால் அவருக்கும் இரண்டாவது முறையாக ஜாக்பாட் அடித்து உள்ளது.