இந்திய அரசியல் சாசனத்திற்கே அச்சுறுத்தல்.. பாஜக மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் 133வது நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லியிலுள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று விழா நடைபெற்றது. கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட சீனியர் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
இனிப்புகளை வினியோகம் செய்த ராகுல் காந்தி, பின்னர் கூட்டத்தில் உரையாற்றியதாவது: இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நேரடியாகவே அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடக்கிறது. பாஜகவின் மூத்த நிர்வாகிகளே இந்த தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.
இந்த தாக்குதலை முறியடிக்க வேண்டியது காங்கிரசின் பணி, ஒவ்வொரு குடிமக்களின் பணி.
நமது நாட்டில் இப்போது நடப்பது மோசடி. ஏமாற்று வலையை பாஜக விரித்துள்ளது. பொய்களால் அந்த வலை பின்னப்பட்டுள்ளது. அரசியல் லாபங்களுக்காக பொய் புனையப்படுகிறது. இதுதான் அவர்களுக்கும், நமக்குமான வித்தியாசம். நாம் சரியாக செயல்படாமல் இருந்திருக்கலாம், நாம் தோல்வியும் அடைந்திருக்கலாம். ஆனால், என்றுமே காங்கிரஸ் உண்மையை, கைவிட்டதில்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
மதச்சார்பின்மை குறித்து மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே, இழிவாக பேசியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு தாக்கி பேசியுள்ளார்.