தன் இமேஜை காப்பாற்ற... சீனாவுக்கு நிலத்தை விட்டுக் கொடுத்த பிரதமர்...ராகுல் காந்தி காட்டம்!!
சிர்சா: நமது நிலத்தை யாரும் அபகரித்துக் கொள்ளவில்லை என்று கோழை பிரதமர் கூறுகிறார். உலகிலேயே ஒரே ஒரு நாட்டின் நிலத்தைத்தான் மற்ற நாட்டினரால் அபகரித்துக் கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் தன்னை தேசபக்தர் என்று அழைத்துக் கொள்கிறார். நாம் மட்டும் ஆட்சியில் இருந்து இருந்தால், 15 நிமிடங்களில் சீனாவை தூக்கி எறிந்து இருப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரியானாவில் கூறினார்.
ராகுல் காந்தியுடன்...அமர்ந்து இருந்த பஞ்சாப் அமைச்சருக்கு...கொரோனா தொற்று உறுதி!!
அரியானாவில் இன்று விவசாய சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் பேரணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ''கிழக்கு லடாக் பகுதியில் நமது மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இருந்தால், எல்லைக்கு நூறு கி.மீட்டருக்கு அப்பால் சீன ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டி அடித்து இருக்கும்.
ஆனால், நமது நிலத்தை யாரும் அபகரிக்கவில்லை என்று நமது கோழை பிரதமர் கூறுகிறார். பிரதமர் தன்னை தேசபக்தர் என்று கூறிக் கொள்கிறார். யாரும் நமது நிலத்தை அபகரித்துக் கொள்ளவில்லை என்று கூறுகிறார். அப்புறம் எப்படி 1200 கி. மீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்து இருக்க முடியும்.
பாரத் மாதா என்று பேசிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், பாரத் மாதாவின் 1200 சதுர கி. மீட்டர் நிலத்தை சீனாவுக்கு நரேந்திர மோடி தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள விட்டுக் கொடுத்து இருக்கிறார். இது உண்மை'' என்றார்.
இதற்கு முன்னதாக பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பேசி இருந்த ராகுல் காந்தி, ''நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி பிரதமர் மோடி கவலைப்படுவதில்லை. மாறாக அவரது இமேஜைதான் பாதுகாத்து வருகிறார்'' என்றார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் ராகுல் காந்தி நேற்று முதல் டிராக்டர் பேரணி மேற்கொண்டு வருகிறார்.