2ஜி ஸ்பெக்ட்ரம் கேஸ் கிளைமாக்ஸ்.... அக் 25-ல் அதிரடி தீர்ப்பு: நீதிபதி ஓபி ஷைனி அறிவிப்பு
Recommended Video
டெல்லி: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் அக். 25ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது.
முந்தைய மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் முறைகேடு நடந்ததால் ரூ1,76,000 கோடி இழப்பீடு அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) அறிக்கை குற்றம்சாட்டியது.
இந்த குற்றச்சாட்டால் நாடு முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அப்போதைய அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் அரசியல் ஆயுதமாக மாறியது.
6 வருடங்களாக வழக்கு
இது தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகாலமாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
ஏப்ரலில் விசாரணை முடிந்தது
இவ்வழக்கில் ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஜூலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி ஆகஸ்ட் 25ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்திருந்தார்.
இன்று தீர்ப்பு தேதி
இந்நிலையில் ஆக.25ம் தேதி, தீர்ப்பு இன்றும் தயாராகவில்லை என்றும், எனவே செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். எனவே செப்டம்பர் 20ம் தேதியை நோக்கி அனைவர் பார்வையும் திரும்பியது.
அக்டோபர் 25ல் தீர்ப்பு
இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்கள், எழுத்துப்பூர்வ விளக்கங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அக். 25ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று, நீதிபதி ஓபி ஷைனி இன்று அறிவித்தார். அதேநேரம், 25ம் தேதியில் தீர்ப்பு வழங்கப்பட முடியாவிட்டால், அடுத்த சில நாட்களுக்குள் கூட தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
பல்வேறு விஷயங்களை படித்து பார்க்க கால அவகாசம் தேவைப்படுவதால் இவ்வாறு குறிப்பிடுவதாக நீதிபதி அப்போது தெரிவித்தார்.