குழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு
பாட்னா: பீகாரில் மூளைகாய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கை தற்போது 132 ஆக உயர்ந்துள்ளது.
முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 111 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர். நோய் பாதிப்பால் இன்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
'அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்' மற்றும் 'ஜப்பான் என்சபிலிட்டிஸ்' என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே ஆகியோரின் அலட்சியத்தால் தான் இத்தகைய பேரிழப்பு நிகழ்ந்ததாக கூறி முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் தமன்னா ஹாசினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், மத்திய, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களிடம் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.