குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி ஹைகோர்ட்!
குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டெல்லி: குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரை ஒதுக்கக்கோரிய டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில் தனக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்றும் தனது அணிக்கு அதிமுக அம்மா அணி என்ற பெயரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் டிடிவி தினகரன் தலைமையிலான அணிக்கு கட்சிப் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. டிடிவி தினகரன் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாததால் கட்சியின் பெயர் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இந்த வழக்கில் தினகரன் தரப்பு, முதல்வர் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் தரப்பு வாதங்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.