சேகர் ரெட்டி கூட்டாளி பரஸ்மால் லோதாவின் ரூ. 9.7 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளி பரஸ்மால் லோதாவுக்கு சொந்தமான ரூ.9.7 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 147 கோடியும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.34 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார் மற்றும் கூட்டாளிகளான திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம், முத்துப் பட்டினம் ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் 6-வது குற்றவாளியாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் பரஸ்மால் லோதா சேர்க்கப்பட்டார்.
இதனிடையே, சேகர் ரெட்டி, பரஸ்மால் லோதா மீது அமலாக்கத் துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேகர் ரெட்டிக்கு, புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த புகாரில் அவர் கைதாகினார். இந்நிலையில் பரஸ்மால் லோதாவுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி அமலாக்கதுறை நடவடிக்கை எடுத்துள்ளது.. அதன் மதிப்பு ரூ.9.7 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சேகர் ரெட்டிக்கு சொந்தமான 80 கிலோ தங்கம் முடக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.14 கோடியாகும். சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ. 68 கோடி மதிப்பிலான சொத்துகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.