காங்கிரஸின் ஆணிவேர்.. நீங்க முடியாத நிழல்.. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒரு ஆலமரம்!
ராஜஸ்தான் முதல்வராக தேர்வாகி இருக்கும் அசோக் கெலாட் மிக நீண்ட அரசியல் வரலாறை கொண்டவர்.
போபால்: ராஜஸ்தான் முதல்வராக தேர்வாகி இருக்கும் அசோக் கெலாட் மிக நீண்ட அரசியல் வரலாறை கொண்டவர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான கெலாட், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். அனைத்து மாநில தேர்தலிலும் இவரின் பங்கு இருக்கும். இவர் 1998 முதல் 2003 மற்றும் 2008 முதல் 2013 என்று இரண்டு முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்துள்ளார்.
இவர் ஐந்து முறை லோக் சபா எம்.பியாக இருந்துள்ளார். 6 வெவ்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அத்தனை முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
இந்திரா காந்தி வரலாறு
இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட். கட்சியின் தீவிர விசுவாசி, மூத்த தலைவர். மத்திய சுற்றுலா மற்றும் விமான துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். இந்திரா காந்திக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல் ராஜிவ் காந்தி, சோனியா காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார்.
காங்கிரஸ் தொண்டன்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் பிறந்த இவருக்கு தற்போது 67 வயது ஆகிறது. காந்தி மூலம் ஈர்க்கப்பட்டு இவர் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பின் கட்சியில் சேர்ந்தார். அப்போதில் இருந்து காங்கிரசில் இருக்கிறார்.
பப்புவை ஒழித்தவர்
சில காலம் முன்பு வரை ராகுலை இந்தியாவே 'பப்பு' என்று கிண்டல் செய்து வந்தது. ஆனால் குஜராத் சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரத்தில் ராகுலின் பேச்சு பாராட்டப்பட்டது. அதற்கு பின்னால் இருந்தது அசோக் கெலாட்தான். இவர்தான் ராகுல் என்ன பேசவேண்டும், என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியவர். அது இந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வரை எதிரொலித்தது,
மிக நெருக்கம்
ராகுல் மீது இருக்கும் சில எதிர்மறை விமர்சனங்களை மாற்றுவதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்த ராகுல் காந்தி, தலைவராக ஆனதற்கு பின் இருந்தது அசோக் கெலாட்தான். அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர்களின் நிழல் என்று கூறப்படுகிறது. இந்திராவும், ராஜிவ் காந்தியும் பல முக்கிய முடிவுகளை இவரின் ஆலோசனையின் பேரிலேயே எடுத்தனர். அந்த அளவுக்கு அரசியல் நுணுக்கம் தெரிந்தவர்.
பெரும் உற்சாகம்
முதல்வர் வாய்ப்பை இழந்த இளைஞரான சச்சின் பைலட்டிக்கும் இவர் மிகவும் நெருக்கமானவர். இத்தனை நீண்ட வரலாறை கொண்ட அசோக் கெலாட்தான் தற்போது ராஜஸ்தான் முதல்வராக தேர்வாகி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்த முடிவு காங்கிரஸ் தொண்டர்களை பெரிய உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.