சென்னை சூப்பர் கிங்ஸ் கதி என்னாகும்?.. 6 மாதத்தில் தெரியும்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய சட்ட திட்டங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 3 நபர் குழுவின் பரிந்துரை அறிக்கைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கதி குறித்து முடிவு செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கில் இன்று சுப்ரீ்ம் கோர்ட் அதிரடி தீர்ப்பை அளித்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்புள்ளது, அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இதனால் இந்த இரண்டு அணிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்துள்ளார் என்றும் சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இந்த இரு அணிகளுக்கும் தடை வரலாம் என்று தெரிகிறது. இருப்பினும் இன்றைய தீர்ப்பில் இந்த அணிகள் குறித்து முக்கிய உத்தரவை நீதிபதிகள் பிறப்பிக்கவில்லை.
மாறாக பிசிசிஐ சட்ட திட்டங்களை ஆய்வு செய்ய 3 நபர் கமிட்டியை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த கமிட்டி தனது பரிந்துரை அறிக்கையை 6 மாதத்திற்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் நிலை குறித்து சுப்ரீம் கோர்ட் முடிவெடுக்கவுள்ளது.