போலீசாருக்கு ஒரு நாள் சாப்பாட்டு செலவு ரூ.75 லட்சமாம்.. கணக்கு காட்டும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்
ஹைதராபாத்: இந்தியா, வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையே கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாரின் உணவுக்கு ரூ.75 லட்சம் செலவிட்டது குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்தியா-வங்காளதேச அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடந்தது. இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் லோதா கமிட்டி பரிந்துரையை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அமல்படுத்த உத்தரவிட வேண்டும், டெஸ்ட் போட்டியை நடத்த மேற்பார்வையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஹைதராபாத் ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், டெஸ்ட் போட்டிக்காக மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்தது.
இதுதொடர்பாக டெஸ்ட் முடிந்த பிறகு போட்டி குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க ஹைதராபாத் ஹைகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் பார்வையாளர் அறிக்கையை சமர்பித்து இருந்தார்.
அந்த அறிக்கையில், 25 சதவீத டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்ட போது பாதுகாப்புப் பணிக்காக 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் அவர்களின் தினசரி உணவுக்கு ரூ.75 லட்சம் செலவழிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அறிக்கையில் உள்ள இந்தத் தகவலை அடுத்து, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது தங்கள் அதிருப்தியை தெரிவித்த நீதிபதிகள், 10 நாட்களுக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.