எடப்பாடி ராஜினாமா உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து போராட தென்மாநில வக்கீல்களுக்கு கட்ஜூ அழைப்பு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து போராட வருமாறு தென் மாநில வழக்கறிஞர்களுக்கு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அழைப்பு விடுத்துள்ளார்
டெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து போராட வருமாறு தென் மாநில வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் திருப்பங்களை அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர். மேலும் சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்தது முதல் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது வரை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார் மார்கண்டேய கட்ஜூ.
4 முக்கிய கோரிக்கைகளுக்காக தமிழகம் மற்றும் தென் மாநில வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என்று தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் தென் மாநில வழக்கறிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போராட வேண்டும்
அதில், தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பார் அசோசியேசன், வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்ட வேண்டும். நாளை (திங்கள்கிழமை) முதல் தினந்தோறும் அந்த 4 கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் வரை சட்ட ரீதியாகவும் அமைதியாகவும் போராட்ட வேண்டும். வழக்கறிஞர்களுக்கு தென் மாநில மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்ஜூ முன்வைத்துள்ள 4 கோரிக்கைகள்:
வழக்காடு மொழி
உத்தரப் பிரதேசம், பீகார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலத்துடன், ஹிந்தியும் வழக்காடு மொழியாக உள்ளது. ஆட்சி மொழி சட்டம் மற்றும் சட்டவிதி 348(2)-இன் கீழ் உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக்காடு மொழியாக மாநில ஆளுநர்கள் உத்தரவு மூலம் நடைமுறைக்கு வந்தது. அதை போல ஆங்கிலத்துடன் தமிழை சென்னை உயர்நீதிமன்றத்திலும் தெலுங்கை ஆந்திரா உயர்நீதிமன்றத்திலும் கன்னடத்தை கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் மலையாளத்தை கேரள உயர்நீதிமன்றத்திலும் வழக்காடு மொழியாக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற கிளை
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சட்விதி 130-ஐ பயன்படுத்தி, தென்னிந்தியாவில் உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையிலோ அல்லது இதர தென்னிந்திய நகரங்களிலோ ஏற்படுத்தலாம். தற்போது வழக்குகளுக்காக டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்துக்கு செல்வதால் அதிக தொகை செலவிடப்படுகிறது.
கைப்பாவை எடப்பாடி ராஜினாமா தேவை
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பெங்களூரு சிறைப்பறவையின் கைப்பாவையான எடப்பாடி பழனிச்சாமி, உடனடியாக பதவியை ராஜிநாமா செய்ய வைக்க வேண்டும். மேலும் தமிழகத்தின் முதல்வராக நேர்மையான அதிகாரியே இருக்க வேண்டும். அதற்கு சரியான நபர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.நட்ராஜ் என்பது என்னுடைய கருத்து.
ஹைட்ரோகார்பன்
தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் உரிய அறிவியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளும் வரை உடனடியாக தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
போராட்ட முறை
இந்த 4 கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாளை முதல் கையில் வெள்ளை பேண்ட் அணிந்து வழக்கறிஞர்கள் போராட வேண்டும். வெள்ளை பேண்ட் என்பது போராட்டத்தின் குறியீடு ஆகும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவற்றை வழக்கறிஞர்கள் நீக்க வேண்டாம்.
இவ்வாறு கட்ஜு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.