குடியரசு தினத்தன்று.. அயோத்தியில் மசூதிக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம்!
அயோத்தியில் புதிய மசூதிக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படுகிறது
அயோத்தி: ஒரே நேரத்தில் அயோத்தியில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தும் அளவுக்கு மிக பிரமாண்ட மசூதி ஒன்று கட்டப்படுகிறது... அதற்கான அடிக்கல், வருகிற குடியரசு தினத்தன்று நாட்டப்பட உள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த அப்பீல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக விசாரித்து, கடந்த நவம்பர் 9-ந்தேதி தீர்ப்பு அளித்தது.
அந்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு வழங்கி உத்தரவிட்டது. மேலும், முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
தானிப்பூர்
அதன்படி, தானிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் புதிய மசூதி கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ளது... இந்த நிலத்தில், உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ள அறக்கட்டளை புதிய மசூதியை கட்ட இருக்கிறது. இதுகுறித்து இந்திய இஸ்லாமிய கலாச்சார அமைப்பின் செயலாளர் அத்தர் ஹுசேன் தெரிவித்துள்ளதாவது:
தொழுகை
"2021ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று புதிய மசூதி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்படும்... மசூதி வட்ட வடிவில் இருக்கும்.. ஒரே நேரத்தில் அங்கே 2 ஆயிரம் பேர் உட்கார்ந்து தொழுகை நடத்தும் அளவுக்கு மிக பிரம்மாண்டமாக அமையும். இந்த மசூதி ஏற்கனவே இருந்த பாபர் மசூதியை விட பெரிய அளவில் இருக்கும்.. ஆனால் அதே போன்ற கட்டமைப்பை கொண்டிருக்காது.. கான்கிரீட் கட்டமைப்பாக இருக்காது.. ஆனால், மசூதியின் கட்டிட கலைக்கு ஒத்ததாகவே இருக்கும்.
மல்ட்டி ஸ்பெஷல்
வரும் சனிக்கிழமை புதிய மசூதி, மல்ட்டி ஸ்பெஷல் ஆஸ்பத்திரி, சமூக சமையல்கூடம், லைப்ரரி போன்றவற்றுக்கான வரைபடங்கள் வெளியிடப்படுகின்றன... இந்த வரைபடங்களை தலைமை கட்டிட கலைஞர் எஸ்எம் அக்தர் இறுதி செய்துள்ளார்... சூரிய மின்சக்தி வசதியையும், இயற்கை வெப்ப நிலை பராமரிப்பு முறையையும் கொண்டதாக புதிய மசூதி அமையும்.
பன்முகத்தன்மை
மல்ட்டி ஸ்பெஷல் ஆஸ்பத்திரியுடன் நர்சிங் காலேஜும், மருத்துவ சார்பு காலேஜும் அமைக்கப்பட உள்ளது.. நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே பன்முகத்தன்மைதான்.... எங்களின் மசூதி திட்டத்தின் கொள்கையும் அதேதான்" என்றார். அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியது நினைவுகூரத்தக்கது.