பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா... கொல்கத்தாவில் டாலடித்த நிலவு.. செல்பி எடுத்து கொண்டாடிய மக்கள்!
கொல்கத்தாவில் நிலவு போன்று தத்துரூபமாக அமைக்கப்பட்ட பலூன் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
Recommended Video
கொல்கத்தா: நிலவு போன்று தத்துரூபமாக அமைக்கப்பட்ட பலூன் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. நிலவை மிக அருகில் பார்ப்பதாக உணர்ந்த மக்கள் அதனை போட்டோ எடுத்தும் அதனுடன் செல்பி எடுத்தும் கொண்டாடினர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மத்திய அரசின் கலாசார துறை இணைந்து, நிலவின் அருங்காட்சியகம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
அதன்படி அங்குள்ள விக்டோரியா மெமோரியலில் 23 அடி விட்டம் உடைய, நிலவைப் போன்ற மாதிரி, தரையில் இருந்து, 20 அடி உயரத்தில் மிதக்க விடப்பட்டு வருகிறது. வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த நிலவை காணலாம்.
நாசா உதவியுடன்
பலுானால் செய்யப்பட்ட இந்த நிலவின் மீது, நாசாவின் உதவியுடன், உண்மையான நிலவின் வடிவம் பெறப்பட்டு, '3டி' தொழில்நுட்பத்தின் மூலம் ஒளிரவிடப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரை மில்லியன் மடங்கு சிறியது
பிரிட்டனைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் லுாக் ஜெரோம் மற்றும் லண்டன் ஸ்பேஸ் ஏஜென்ஸி உதவியுடன் இந்த நிலவு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான நிலவை விட அரை மில்லியன் மடங்கு சிறியதாகும்.
போட்டோ, செல்பி ஆர்வம்
உண்மையான நிலவை போன்று மேடு பள்ளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிலவை காண பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் நேற்று குவிந்திருந்தனர். பலர் இந்த பிரமாண்ட நிலைவை போட்டோ எடுப்பதோடு செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
பெங்களூரை தொடர்ந்து
இளைஞர்களிடையே வானியல் குறித்த ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிர்லா பிளானட்டோரியம் தெரிவித்துள்ளது. இந்த பிரமாண்ட நிலவு, பெங்களூரு, உதய்பூர், மும்பையை தொடர்ந்து தற்போது கொல்கத்தாவுக்கு வந்துள்ளது.