அரசுக்கு எதிராகச் செயல்பட்ட 735 சமூக வலைத்தளங்கள்.. 596 இணையதளப் பக்கங்கள் முடக்கம்!
ஆன்டி இந்தியன் கருத்துக்களை வெளியிட்ட 735 சமூக வலைத்தளங்கள் மற்றும் 596 இணையதள பக்கங்களை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மத்திய அரசு முடக்கியுள்ளது.
டெல்லி: ஆன்டி இந்தியன் கருத்துக்களை பரப்பி வந்த 735 சமூக வலைத்தளங்கள் மற்றும் 596 இணையதள பக்கங்களை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மத்திய அரசு முடக்கியுள்ளது.
அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் சமூக வலைத்தளங்களும் இணையதளங்களும் பெரும் பங்கெடுத்து வருகின்றன. இளைஞர்களை ஒன்றிணைப்பதிலும் இணையதளங்கள் முக்கிய கருவியாக உள்ளன.
இதுவரை மேற்கத்திய நாடுகளில் மட்டுமே அரசுக்கு எதிரான போராட்டங்களில் மக்களை ஒன்றிணைப்பதில் சமூக வலைத்தளங்களும் இணையதளங்களும் பெரும் பங்காற்றின. இந்நிலையில் இந்தக் கலாச்சாரம் இந்தியாவிலும் ஊடுருவத் தொடங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் முடக்கம்
இணையதளங்கள் மூலம் தேச விரோத கருத்துகள் பரப்பப்படுவதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஆன்டி இந்தியன் கருத்துக்களை பரப்புவதாகக் கூறி சில சமூக வலைத்தளங்களும் இணையதள பக்கங்களையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.
ஆன்டி இந்தியன் கருத்துக்கள்
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி பி சௌத்ரி, ராஜ்யசபாவில் இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். அதில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆன்டி-இந்தியன் கருத்துக்களைப் பகிரும், வெளியிடும் சமூக வலைத்தள மற்றும் இணையப் பக்கங்கள் மற்றும் குழுக்கள் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுக்கள் தேர்வு
பல நீதிமன்றங்களின் வழக்குகள் மற்றும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் படி முடக்கப்பட வேண்டிய பக்கங்களைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்பங்கள் தேசத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும்போது அரசுக்குச் சரியான நேரத்தில் தகவல் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம்
தகவல் தொழில்நுட்பச் சட்டம்- 2000 பிரிவு 69 A-ன் படி சட்ட அமலாக்கத்துறை சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளப்பங்களைத் தொடர்ச்சியாக கண்காணித்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்திற்கு எதிரான கருத்துகள் பகிரப்படும்போது, அதற்கான அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கும் அந்த அறிக்கையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி பி சௌத்ரி தெரிவித்துள்ளார்.