9 ஆண்டுகளில் 5 முறை முதல்வர்களுக்கு பதவிப்பிரமாணம்.. ஆந்திர ஆளுநர் நரசிம்மன் புதிய சாதனை
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஜெகனுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்ததன் மூலம், அந்த மாநில ஆளுநரான இ.எஸ்.எல். நரசிம்மன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவரான இ.எஸ்.எல். நரசிம்மன் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கான கூட்டு கவர்னராக தற்போது பதவி வகித்து வருகிறார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான நரசிம்மன், முதன் முதலாக சட்டீஸ்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பரில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் ஆளுநராக பொறுப்பேற்றார்
பின்னர் ஆளுநர் நரசிம்மன் 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக, கிரண்குமார் ரெட்டிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அடுத்து வந்த ஆண்டுகளில் பெரும் போராட்டம் வெடித்து ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவானது.
மிடியலை... மோடியை தோற்கடித்து 'நேசமணி' வேற லெவல் டிரெண்டிங்..
ஆந்திரா மற்றும் தெலுங்கான என இரு மாநிலங்களுக்குமே கூட்டு ஆளுநராக நரசிம்மன் நியமிக்கப்பட்டார். பின்னர் 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, ஆந்திர முதல்வரான சந்திரபாவுவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் நரசிம்மன்.
அதே ஆண்டில் ஆந்திராவில் இருந்து பிரிந்து சென்று தனியாக உருவெடுத்த தெலுங்கானா மாநில முதல்வராக பொறுப்பேற்ற சந்திரசேகர ராவுக்கும் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் தெலுங்கானா முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வென்றதை அடுத்து மீண்டும் சந்திரசேகர ராவ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகு சந்திரசேகர ராவுக்கு மீண்டும் முதல்வராக, ஆளுநர் நரசிம்மன் கடந்த டிசம்பரில் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் ஆந்திர மாநிலத்திற்கு நடைபெற்ற பேரவை தேர்தலில், அபார வெற்றி பெற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களுக்கு நான்கு முறை பதவி பிரமாணம் செய்து செய்து வைத்திருந்தார் நரசிம்மன். இந்நிலையில் தற்போது விஜயவாடா மாவட்டத்தில் இந்திரா மைதானத்தில் நடைப்பெற்ற அரசு விழாவில், மக்களின் ஆரவாரங்களுக்கிடையே முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன்
இதனையடுத்து கடந்த 9 ஆண்டுகளில் 5 முதல்வர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து, இதுவரை எந்த ஆளுநரும் செய்யாத சாதனையை செய்துள்ளார் ஆந்திர தெலுங்கானா மாநிலங்களின் கூட்டு ஆளநராக உள்ள நரசிம்மன். இது வரை ஒரே மாநில முதல்வர்களுக்கு எந்த ஒரு ஆளுநரும் ஐந்து முறை பதவி பிரமாணம் செய்து வைத்ததில்லை. மேலும் ஆந்திர மாநிலத்தில் அதிக ஆண்டுகள் பணியாற்றிய ஆளுநராகவும் நரசிம்மன் உள்ளார்