நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படுமா? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
டெல்லி : சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் மீண்டும் கூட்டப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களை இன்று சந்திக்க உள்ளார். அந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படுவது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், அமளி, கூச்சல் குழப்பங்களால் முற்றிலுமாக முடங்கியது. லலித் மோடி விவகாரம், மத்தியப் பிரதேச தேர்வு வாரிய முறைகேடு வழக்கு ஆகியவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, கடந்த 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. மழைக்காலக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயன்றது. எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், அரசின் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
அதேவேளையில், மழைக்காலக் கூட்டத் தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றும் நோக்கில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. மத்திய அமைச்சர்களும், அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் நாடாளுமன்றத்தைக்கூட்டுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திக்கும் நாடாளுமன்ற விவகாரத்திதுறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.