தி கிரேட் காளி பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது... திரிணாமுல் காங்கிரஸ் புகார் மனு
கொல்கத்தா: தொழில்முறை மல்யுத்த விளையாட்டில் (WWE) உலக சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியரான தி கிரேட் காளி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியில் தனது நண்பர் அனுபம் ஹஸ்ரா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அமெரிக்காவில் வசித்து வரும் தி கிரேட் காளி இந்தியா வந்துள்ளார். அனுபம் ஹஸ்ரா கடந்த 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது அவருடன் இணைந்து தி கிரேட் காளி என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் தலிப் சிங் ரானா, ரனிகுத்தி முதல் அலிபோர் வரை திறந்த ஜீப்பில் மக்களிடையே ஹஸ்ராவிற்கு பிரச்சாரம் செய்தபடி சென்றார்.
இந்தநிலையில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி கிரேட் காளி மீது தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் கடிதம் அளித்துள்ளது. தி கிரேட் காளியின் அமெரிக்க குடியுரிமையை சுட்டிக்காட்டி இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மல்யுத்த வீரர் தி கிரேட் காளிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, வங்காளதேச நடிகர் பெர்டோஸ் அகமது மற்றும் இந்திய நடிகர்கள் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கென்னையாலால் அகர்வாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக பாஜக சார்பில் புகார் எழுப்பப்பட்டது. இதனையடுத்து அவருடைய விசாவை ரத்து செய்த இந்திய உள்துறை அமைச்சகம், அவரை கருப்பு பட்டியலிலும் இணைத்தது.
தீவிரப் புயலாக மாறும் ஃபனி.. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்
விசா விதிமுறைகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து, மன்னிப்பு கோரிய வங்காளதேச நடிகர் பெர்டோஸ் அகமது இந்தியாவை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், பதிலடியாக, தி கிரேட் காளி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.