வோடபோன் ஐடியாவின் விஸ்வரூப இணைப்பு.. இந்தியாவின் புதிய பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம்!
ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
டெல்லி: ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
டேட்டா, உலகின் பெரிய சந்தை இனி இதுதான். இந்த டேட்டா சந்தையை பிடிப்பதுதான் உலகம் முழுக்க போட்டியாக மாறியுள்ளது. 120 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கும் இந்தியாவிலும் இதேதான் பெரிய சந்தையாக திகழ்கிறது.
இந்த போட்டியில், தற்போது ஒன்றாக சேர்ந்து ஓட இருக்கிறது ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். இரண்டு நிறுவனமும் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
வெற்றிபெற்ற இணைப்பு
பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்த இணைப்பு சாத்தியம் ஆகியுள்ளது. இதில் வோடபோன் அதிகமாக 45.2% சதவிகித பங்கை பெற்றுள்ளது. ஐடியாவின், ஆதித்யா பிர்லா நிறுவனம் 26% பங்குகளை பெற்றுள்ளது. ஆனால் இரண்டு நிறுவனமும் ஒரே அளவு முடிவெடுக்கும் அதிகாரத்தையே பெற்றுள்ளது.
சேர்மேன் யார்
இதில் முடிவெடுக்கும் போர்ட் இயக்குனர்களாக 12 பேர் இருக்கிறார்கள். ஆதித்ய பிர்லா குழுவை சேர்ந்த குமாரங்கலம் பிர்லா இதன் சேர்மேனாக செயல்படுவார். விரைவில் இரண்டு நிறுவனங்களுக்கும் சமமான அளவில் பங்குகள் பிரித்து தரப்படும்.
எத்தனை பேர் தற்போது இருக்கிறார்
தற்போது இந்தியாவிலேயே பெரிய நிறுவனம், ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம்தான். ஆம் 48 கோடி பேர் இந்த நிறுவனத்திற்கும் வாடிக்கையாளராக இருக்கிறார்கள். இந்தியாவில் இவர்கள்தான் பல்வேறு இடங்களில் அதிக தொலைத்தொடர்பு டவர்களை வைத்து இருக்கிறார்கள்.
ஜியோதான் போட்டி
இது ஜியோவிற்கு பெரிய போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இணைப்பு காரணமாக நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக மாறியுள்ளது. தற்போது ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஐடியா - வோடபோன் ஆகிய நான்கு முக்கிய நிறுவனங்கள் இடையே பெரிய போட்டி உருவாகி உள்ளது.