இந்திக்காரர்களுக்கு ஆங்கிலம் தேவையாம்.. தமிழர்களுக்கு தேவையில்லையாம்.. இது கட்ஜு குசும்பு!
டெல்லி: முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடந்த சில நாட்களாக தமிழகத்தையும், தமிழர்களையும் சீண்டும் வேலையில் இறங்கியுள்ளார். இந்திக்காரர்கள் ஆங்கிலம் படிக்கத் தேவையில்லை. இந்தியை முழுமையாக பேசினாலே போதும் என்று தனது பேஸ்புக் மூலமாக அறிவுரை கூறியுள்ள அவர், தமிழர்கள் ஏன் ஆங்கிலத்தை விரும்புகிறார்கள். அவர்கள் இந்தியைப் படிக்க வேண்டும். அப்போதுதான் வட இந்தியாவுக்குப் போனால் பிழைக்க முடியும் என்று எழுதியுள்ளார்.
இந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்தித் திணிப்பு அறிவுரையாக இந்த பதிவைப் போட்டுள்ளார் கட்ஜூ. அதேசமயம், எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு எந்த மொழியையும் யார் மீதும் திணிக்க முடியாது என்றும் கட்ஜு கூறியுள்ளார்.
இந்தப் பதிவில் தமிழர்களை மட்டுமே அவர் குறை சொல்லியிருக்கிறார். இந்தி பேசாத, இந்தித் திணிப்பை எதிர்க்கும் பிற மாநிலங்கள் குறித்து அவர் கண்டு கொள்ளவே இல்லை. மேலும் இந்திக்காரர்களுக்கு ஆங்கிலம் தேவை என்று கூறும் அவர் தமிழர்களுக்கு மட்டும் ஏன் அது தேவையில்லை என்று கூறுகிறார் என்றும் புரியவில்லை. அது எப்படி ஒரே நாட்டில் இருப்பவர்களுக்கு இரு விதமான நிலைப்பாட்டை அவர் அறிவுரையாக கூற முடியும் என்பதும் புரியவில்லை.
கட்ஜூவின் பதிவிலிருந்து...
இந்தி மட்டும் போதாது ஆங்கிலமும் தேவை
நான் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அங்குள்ள வக்கீல்கள் சங்கத்தின் கூட்டத்திற்குக் கூப்பிட்டார்கள். நான் வந்தால் ஏதாவது பேசுவேன். உங்களுக்குப் பிடிக்காது, வேண்டாம் என்றேன் நான். இல்லை கண்டிப்பாக வர வேண்டும் என்றார்கள். நானும் போனேன். அங்கு பேசிய பலர் ஆங்கிலத்தை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். அது ஒரு அடிமை என்று பேசிக் கொண்டிருந்தனர். இந்தியை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
ஆங்கிலம் அவசியம்
பின்னர் நான் பேச எழுந்தபோது உங்களது பிள்ளைகள் ஆங்கிலம் படிக்காவிட்டால் மாட்டு வண்டிதான் ஓட்டும் நிலை ஏற்படும். எனக்கும் இந்தி பிடிக்கும். காரணம், எனது தாய் மொழி. அதேசமயம், நான் முட்டாள் இல்லை. உலகில் உள்ள அனைத்து அறிவும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. என்ஜீனியரிங் படித்தாலும் சரி, மருத்துவம் படித்தாலும் சரி ஆங்கிலத்தில்தான் பாடம் உள்ளது. சட்டப் புத்தகம் கூட ஆங்கிலத்தில்தான் உள்ளது. எப்படி ஆங்கி்லம் தெரியாமல் இதைப் படிக்க முடியும்?
ஆங்கிலத்தை வெறுப்பது முட்டாள்தனம்
ஆங்கிலத்தை வெறுப்பது என்பது முட்டாள்தனமாகும். ஆங்கிலம் படிக்காதே என்று குழந்தைகளுக்குச் செல்வோர் அவர்களது எதிரிகள் ஆவர். உண்மையில் ஆங்கிலத்தை நாம் நாடு முழுவதும் பரப்ப வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி அடையும். இந்தி எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனால் நாம் பேசும் இந்தி அனைவருக்கும் புரிகிறதா என்றால் இல்லை.
இந்தி மொழி செயற்கையானது
சாதாரண ஜனங்கள் பேசுவது இந்துஸ்தானி அல்லது கரிபோலி. அது இந்தி அல்ல. இந்தி என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட மொழியாகும். அது சாதாரண ஜனங்களுக்குப் புரியாது. சாதாரண ஜனங்களுக்குப் புரிய கூடிய இந்தி இப்போது பேசப்படுவது இல்லை. அதை அரபு ஆதிக்கம் கெடுத்து விட்டது என்று தனது பேச்சில் ஆங்கிலத்தை உயர்த்தியும், இந்தி மட்டும் படித்தால் போதாது என்று அறிவுரையும் கூறியுள்ளார் கட்ஜு. அடுத்து அவர் தமிழர்களை இழுக்கிறார். அது இதோ..
திருக்குறளில் சமஸ்கிருதக் கலப்பு
தமிழில் பல வார்த்தைகள் சமஸ்கிருத வார்த்தைகள்தான். உதாரணத்திற்கு ஆச்சரியம். இது ஆச்சார்யா என்ற சமஸ்கிருத வார்த்தையின் வடிவாகும். திருக்குறளில் கூட சமஸ்கிருதம் கலந்துள்ளது. உதாரணத்திற்கு, அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. இதி்ல் 7 வார்த்தைகளில் 4 வார்த்தைகள் சமஸ்கிருதம் ஆகும்.
"அகர" சமஸ்கிருதம்!
இதில் அகர என்பது அகர் என்ற சமஸ்கிருத வார்த்தையாகும். ஆதி, பகவன் ஆகியையும் சுத்த சமஸ்கிருத வார்த்தைகளாகும். உலகு என்பதும் லோகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் மாற்றமாகும். இதற்காக திருக்குறளை தடை செய்து விட முடியுமா. அப்படிச் சொன்னால் அது முட்டாள்தனம்.
தமிழர்களே ஆங்கிலம் எதுக்கு.. இந்தி படியுங்கள்!
இந்த நேரத்தில் நான் இந்தி பேசாத மாநிலங்களான தமிழ்நாடு உள்ளிட்டவற்றுக்கு விடுக்கும் கோரிக்கை இந்தி படியுங்கள் என்பதுதான். முடிந்தால் இந்துஸ்தானி படியுங்கள். இதுதான் நாட்டின் இணைப்பு மொழியாகும் ( நன்கு கவனியுங்கள்.. அலகாபாத்தில் பேசியபோது நாடு முழுவதும் ஆங்கிலத்தைப் பரப்பக் கூறினார்.. இப்போது இந்திதான் இணைப்பு மொழி என்கிறார்) உதாரணத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மாநிலத்தை விட்டு வெளியே வந்தால் மிகவும் சிரமப்படுகிறார்கள். காரணம், அவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால்.
ஜெயலலிதாவிடம் கூறினேன்
நான் முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது கூட தமிழர்கள் இந்தி கற்க வேண்டும் என்றார். அதற்கு ஜெயலலிதா, தமிழரக்ள் 1960 வரை இந்தி கற்றுக் கொண்டுதான் இருந்தனர். ஆனால் ரவட இந்தியர்கள் தென்இந்தியாவில் இந்தித் திணிப்பி்ல் இறங்கியதால்தான் இந்தி கற்பதை தமிழர்கள் நிறுத்தினார்கள் என்றார். அதற்கு நான் கூறினேன், வட இந்தியர்கள் செய்தது தவறு. எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்றேன்.
ஆனாலும் கற்க வேண்டும்
ஆனால் இது ஜனநாயக காலம். யார் மீதும் எதையும் திணிக்க முடியாது. இருப்பினும் நடந்தது நடந்து விட்டது. இனிமேலாவது தமிழர்கள் இந்தி கற்க வேண்டும். சில காலத்திற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் பேசியபோது கூட மாணவர்களிடம் இந்தி கற்கக் கூறினேன். அவர்களில் சிலர் பின்னர் எனக்கு நான் இந்தி கற்கிறேன் என்று கூறி மெயில் அனுப்பினர்.
பேராசிரியர் எதிர்த்தார்
ஆனால் ஒரு பேராசிரியர் ஒருவர் என்னிடம், ஆங்கிலம் ஏற்கனவே இணைப்பு மொழியாக உள்ளது. எனவே இந்தி கற்கத் தேவையில்லை என்றார். அதற்கு நான் சொன்னேன், இல்லை அது தவறு. ஆங்கிலம் பேசுவோர் 5 முதல் 10 சதவீதம் பேர்தான் இருப்பார்கள். டெல்லியில் ஆட்டோ டிரைவர்களிடம் பேசினால் அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். இந்தியில்தான் பேசுவார்கள் என்று அவரிடம் கூறினேன்.
குல்பர்கா ஆகா.. ஓஹோ!
நான் ஒருமுறை குல்பர்காவுக்குப் (கர்நாடகா) போயிருந்தபோது என்னை வரவேற்க வந்த பேராசிரியர் கன்னடக்காரர். டாக்சி டிரைவர் தெலுங்கு பேசுபவர். ஆனால் அவர்கள் இருவரும் இந்தியில் பேசிக் கொண்டனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுகுறித்து பேராசிரியரிடம் கேட்டபோது எனக்கு தெலுங்கு தெரியாது. அவருக்கு கன்னடம் தெரியாது. ஆனால் எங்களுக்கு இந்தி தெரியும் என்றார்.
எல்லோரும் இந்தி கத்துக்கங்க
இந்தி எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது. ஏன் பாகிஸ்தானில் கூட பேசப்படுகிறது. அதன் பெயர் அங்கு உருது. எனவே இந்தி தெரிந்தால் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் நாம் சகஜமாக போக முடியும் என்று இந்தப் பதிவில் கூறியுள்ளார் கட்ஜு.