நிதிஷ்குமார் அதிகார பசிக்கு அடுத்த விக்கெட் காலி.. ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவர் சரத்யாதவ் பதவி பறிப்பு
டெல்லி: ஐக்கிய ஜனதாதள கட்சியின் ராஜ்யசபா தலைவர் பதவியிலிருந்து சரத்யாதவை நீக்கியுள்ளது அக்ட்சி தலைமை.
பீகார் மாநிலத்தில் நடந்த கடந்த சட்டசபை தேர்தலின்போது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. பீகார் முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.
இந்த நிலையில் ரயில்வே விருந்தினர் இல்லம் தொடர்பான ஊழல் வழக்கினால் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் தேஜஸ்வி வந்தார். அவரை பதவியிலிருந்து விலக நிதிஷ்குமார் வலியுறுத்தியும், அவர் பதவி விலகவில்லை என்பதால் நிதிஷ்குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைதொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார். ஆனால், அவரது முடிவுக்கு ஐக்கிய ஜனதா தள மூத்ததலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்தார்.
இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் சரத் யாதவ் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். லாலுவுடன் கூட்டணி குறித்து பேசவுள்ளதாக தெரிவித்தார். இதனால் கோபமடைந்த நிதிஷ்குமார் கட்சியின் தலைமைக்கு நெருக்கடி அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜ்யசபா கட்சித் தலைவர் பதவியில் இருந்து சரத் யாதவை நீக்கி ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஆர்.பி.சிங் ராஜ்யசபா கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஐக்கிய ஜனதா தளம் இன்று இதற்கான கடிதத்தை அளித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளத்துக்கு மாநிலங்களவையில் மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நிதிஷ்குமாரின் ஆதரவாளரான ஆர்.பி.சிங், ராஜ்யசபா அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.