நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு- தலைமை நீதிபதிக்கு சம்பளம் மாதம் ரூ2.8 லட்சம்!
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மத்திய அரசு 200 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
டெல்லி: உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பளத்தை மத்திய அரசு 200 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துமாறு கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியான டிஎஸ் தாக்கூர் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
பின்னர், மூன்று நீதிபதிகள் குழு, நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு பரிந்துரைத்தனர். இதுதொடர்பாக அறிக்கையும் கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு சமர்பிக்கப்பட்டது.
நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு
இந்நிலையில் உச்சநீதிமன்றம் மற்றும் 24 உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 200 சதவீத ஊதிய உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2016 ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தலைமை நீதிபதிக்கு எவ்வளவு?
இதுவரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இனி 2,80000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.
மற்ற நீதிபதிகளின் சம்பளம்?
இதேபோல் உச்சநீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளின் சம்பளம் இரண்டரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை அவர்களுக்கு 90000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
ஹைகோர்ட் நீதிபதிகளின் சம்பளம்
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளமும் 80000 ரூபாயில் இருந்து இரண்டேகால் லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சரவை செயலாளர்களின் ஊதியமும் இதேபோன்று உயர்த்தப்பட்டுள்ளது.
பெரும்பகுதி ஏற்பு
மூன்று நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரைகளின் பெரும்பகுதியை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. மூன்று நீதிபதிகள் குழு, தலைமை நீதிபதிக்கு மாதத்திற்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது.
அரசாணை வெளியீடு
இந்நிலையில் தலைமை நீதிபதிக்கு இனி மாதந்தோறும் 2.8 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என அறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.