தனி சர்வர், தனி ஆப்ஸ் மூலம் தீவிரவாத தாக்குதல்களை தடயமில்லாமல் நடத்தும் லஷ்கர் இ தொய்பா...
டெல்லி: நாடுகளின் ராணுவங்கள் மட்டும்தான் நவீன தொழில்நுட்படங்களை பயன்படுத்த முடியுமா? நாங்களும் செய்வோம் என சவால்விட்டு அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் என தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பாதுகாப்பு தரப்புக்கு பெரும் தலைவலியாக இருப்பது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்புதான். தாங்கள் நடத்தும் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக எந்த ஒரு சிறு தடயமும் இருக்கக் கூடாது என்பதற்காக தனியே ஒரு டெக்னிக்கல் டீமை போட்டு அவர்களுக்கு மாதத்துக்கு பல லட்சம் ரூபாயை ஊதியமாக கொடுக்கிறதாம் அந்த அமைப்பு.
இந்த டெக்னிகல் டீமின் வேலையே ஒரு தாக்குதல் நடத்த திட்டமிடும் போது அத்தாக்குதலில் தொடர்புடைய நபர்களைத் தவிர வேறு எவருக்குமே.. அது லஷ்கர் இ தொய்பாவில் உள்ள பிற தீவிரவாதிகளுக்கும் கூட அதுபற்றி தெரியாமல் இருக்குமாறு தகவல் தொடர்புகளை உருவாக்கிக் கொடுப்பது என்பதுதான். ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் ஊடுருவி தாக்குதல் நடத்திய போது பிடிபட்ட தீவிரவாதி நவீத்திடம் நடத்திய விசாரணையில்தான் இதுபோன்ற பல தகவல்கள் கிடைத்தன.
உதம்பூர் தாக்குதலை நடத்துவதற்கு தனியாக ஒரு சர்வர் அமைத்து அதன் மூலமாக தாக்குதலில் தொடர்புடையவர்கள் மட்டுமே தகவல்களை பரிமாறிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. அதேபோல் திட்டமிடப்படுகிற தாக்குதலில் பங்குபெறும் தீவிரவாதிகள் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஆப்ஸ்களையும் உருவாக்கி அதன் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் செய்திருக்கின்றனர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்.
இப்படி திட்டமிட்டு அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மூலம் எந்த ஒரு தடயமும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு சிக்காமல் போய்விடும் என்று நம்புகிறதாம் லஷ்கர் இ தொய்பா அமைப்பு. எத்தகைய அதிநவீன தொழில்நுட்பங்களை தீவிரவாத கும்பல் பயன்படுத்தினாலும் அவற்றை உடைத்து நொறுக்க தேசிய புலனாய்வு ஏஜென்சியும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது என்கின்றனர் அதிகாரிகள்.