பதான்கோட் தாக்குதல்: சிறப்புப் படையினருக்கு பதில் கமாண்டோ படை அழைக்கப்பட்டது ஏன்?- வெடித்தது சர்ச்சை
டெல்லி: பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, தீவிரவாத எதிர் தாக்குதலில் நிபுணத்துவம் பெற்ற ராணுவத்தின் சிறப்பு படைகளை அழைக்காமல், என்.எஸ்.ஜி. என்னும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களை அழைத்தது ஏன் என்ற கேள்வி பாதுகாப்புத்துறை வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானத் தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2ந்தேதி முதல் 4 நாட்களாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே நீடித்த கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள தீவிரவாத எதிர் தாக்குதலில் நிபுணத்துவம் பெற்ற ராணுவத்தின் சிறப்பு படைகளை அழைக்காமல், என்.எஸ்.ஜி. என்னும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களை அழைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சோதனையான சூழ்நிலையில், தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுவதற்கு ராணுவத்தை அழைத்திருந்தால் அவர்கள் இன்னும் திறம்பட நிலைமையை கையாண்டிருப்பார்களே? என பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
ராணுவத்தின் 29 காலாட்படை பிரிவு பதன்கோட்டைத் தான் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. அங்கு 40 ஆயிரம் துருப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.