கர்நாடகத்தில் விரைவில் மகத்தான மாற்றம்,.. மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும்.. எடியூரப்பா நம்பிக்கை
சின்சோலி: காங்கிரஸ் கட்சிக்கு லிங்காயத் சமூக மக்கள் வாக்களித்தால் அது கடுமையான குற்றம் என எடியூரப்பா பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
கர்நாடகத்தில் சின்சோலி மற்றும் குந்தகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பிரச்சாரம் செய்து வருகிறார்.
சின்சோலி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளரான அவினாஷ் ஜாதவை ஆதரித்து பேசிய எடியூரப்பா லிங்காயத் சமூகத் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் இங்கு திரண்டுள்ள வீரசைவ சமாஜ் மக்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். முன்னாள் முதல்வர் வீரேந்திர பாட்டீலை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியது. கர்நாடகத்தில் 178 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்தவர் அவர்.
அவரையே காங்கிரஸ் அவமானப்படுத்தியது. இதை மனதில் வைத்து கொள்ளுங்கள். எனவே காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் ஆதரவளித்தால் அது மிகப்பெரிய குற்றம் என்றார் எடியூரப்பா.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. அக்கட்சிகளின் 20 எம்எல்ஏ பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு கர்நாடகத்தில் மகத்தான மாற்றம் நிகழும் என்றார்.
கமலின் 'இந்து தீவிரவாதி' பேச்சை முன்வைத்து 'குளிர்காயும்' பாஜக?
மேலும் மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். இதன்மூலம், பாஜகவின் பலம் உயர்ந்து கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றார்.
எடியூரப்பாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த 2 தொகுதிகளிலும் ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.