மாமிசம் சாப்பிடாதீர்கள், செக்ஸ் வேண்டாம்.. கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு சர்ச்சை அட்வைஸ்!
மாமிசத்திலிருந்து கிடைக்கும் சத்துக்கள் தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களைவிட அதிகமாகும், என்கிறார்கள் மருத்துவர்கள்.
டெல்லி: மாமிசம் சாப்பிடாமலும், உடலுறவு கொள்ளாமலும் இருந்தால் நல்ல குழந்தைகள் பிறக்கும் என்று கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் வழங்கியுள்ள ஆரோக்கிய டிப்ஸ்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்வைஸ் இடதுசாரிகளாலும், மருத்துவர்களாலும் கண்டிக்கப்படுகிறது. ஏனெனில் இதில் பல அட்வைஸ்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை.
இந்திய பாரம்பரிய வைத்திய முறையை மேம்படுத்த 2014ல் ஆயுஷ் அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில் கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
காமத்திற்கு தடை
இந்த புத்தகத்தில் கர்ப்பிணிகள் கோபப்பட கூடாது, காமம் கொள்ள கூடாது (lust), வெறுப்புணர்வு கொள்ளக்கூடாது, மாமிசம் உண்ணக்கூடாது, இறை சிந்தனையிலேயே இருக்க வேண்டும், அறையில் அழகான படங்களை மாட்டிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த திணிப்பு முயற்சி என்ற விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.
உறவு கொள்ளலாம், காமம் இல்லை
மத்திய அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் இதுகுறித்து கூறுகையில், இந்த புத்தகம் 3 வருடங்கள் முன்பு பிரிண்ட் செய்யப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு யோகா உதவும் என்பதற்காக இப்புத்தகம் இயற்றப்பட்டது. ஆனால் உடலுறவு கூடாது என புத்தகத்தில் கூறவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் காமம் கூடாது என தெளிவாக புத்தகத்தில் வார்த்தையுள்ளது. காமம் கூடாது என புத்தகத்தில் உள்ள நிலையில் உடலுறவு கூடாது என கூறவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் எச்சரிக்கை
"இந்த அறிவுரை, அறிவியல்பூர்வம் இல்லாதது. புரத பற்றாக்குறை, சத்துக்குறைபாடு, ரத்த சோகை போன்றவை கர்ப்பிணி பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள். இதை எதிர்கொள்ள இறைச்சி உதவுகிறது. மாமிசத்திலிருந்து கிடைக்கும் சத்துக்கள் தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களைவிட அதிகமாகும்" என்கிறார் அப்பல்லோ ஹெல்த்கேர் குரூப், மகளிர் பிரிவு மருத்துவர் மாளவிகா சபர்வால். மேலும், கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள் சிறிது எச்சரிக்கை தேவை, அதன்பிறகு உடலுறவு கொள்வதில் தவறில்லை என்கிறார் அவர்.
சில டிப்ஸ் ஓகே
தாய் மன அழுத்தம், கோபம், மன இறுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் குழந்தையின் வளர்ச்சியை அது பாதிக்கும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே கர்ப்பிணிகள் முடிந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுவது வழக்கம் என்கிறார் மாளவிகா.