சிலை உடைப்பு சம்பவங்கள்: அசம்பாவிதங்களை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்
சிலை உடைப்பு சம்பவங்கள் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: சிலை உடைப்பு சம்பவங்கள் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
திரிபுராவில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் அங்கிருந்த லெனின் சிலைகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்பட்டது.
இதனால் இரு மாநிலங்களிலும் எதிர்ப்புகள் எழுந்தன. தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சிலை உடைப்பு சம்பவங்களை தடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
பதற்றமான சூழல்
ஆனாலும் கொல்கத்தாவில் சியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
முறையாக பின்பற்றவேண்டும்
இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியதை மாநில அரசுகள் முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன்னிப்பாக கவனிக்கிறது
சிலைகள் உடைக்கப்படும் சம்பவம் தொடர்பாக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர்கள், எஸ்பிக்கள் பொறுப்பு
சிலை இடிப்பு விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.