இழுத்தடித்த காங்.. கடுப்பில் காஷ்மீரின் 6 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்த பரூக் அப்துல்லா
Recommended Video
ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆறு தொகுதிக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் ஆறு மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் ஏப்ரல்11ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இங்கு காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தன. இதற்காக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அதிருப்தி அடைந்த தேசிய மாநாட்டு கட்சி தலைமை, ஜம்மு காஷ்மீரில் உள்ள 6 தொகுதிகளிலும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதனிடையே விரைவில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளும் நம்பிக்கையில் தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் பரூக் அப்துல்லா இருக்கிறார். இதனால் வேட்பாளர்களை அறிவித்தாலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறார். எனவே இந்த இருகட்சிகளும் காஷ்மீரில் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.