ஊழல் அரசு அதிகாரிகள் செய்தி வெளியிட்டால் பத்திரிகையாளருக்கு 2 வருடம் சிறை: ராஜஸ்தானில் பகீர் சட்டம்
முன் அனுமதி பெறாமல் அரசு ஊழியர்கள் மீது வழக்குப் பதிய முடியாது என ராஜஸ்தானில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் சட்டசபையில் நேற்று குற்றவியல் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. கருத்து மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அரசு ஊழியர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் மேல் அனுமதி இல்லாமல் வழக்குப்பதிவதோ, முன் விசாரணை நடத்துவதோ கூடாது என்கிற இந்த அவசர சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்த்தனர்.
இந்நிலையில், நேற்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் மாநில உள்துறை அமைச்சர் ராஜஸ்தான் மாநில குற்ற திருத்தச் சட்ட மசோதாவாக இதை தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டம் நிறைவேறியது. இதன்படி, அரசு ஊழியர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது எந்த வழக்கு பதிவதாக இருந்தாலும், முன் விசாரணை நடத்துவதாக இருந்தாலும் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
பணியின்போது ஊழல், லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தாலும் அவை விசாரணைக்கு நீதிமன்றத்தால் ஏற்கப்படும்வரை அந்த ஊழியர்களை பற்றி எந்த ஒரு செய்தியோ, புகைப்படமோ ஊடகங்கள் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை என்கிற திருத்தங்கள் அந்த மசோதாவில் செய்யப்பட்டு உள்ளன.
இதை ராஜஸ்தான் எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாது நாடு முழுவதும் எதிர்த்து வருகிறார்கள். ' ஊடகத்துறையின் குரலை நெரிப்பது போன்ற இந்த மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும். அரசியல் சாசனம் நமக்குக் கொடுத்து இருக்கும் உரிமைப் பறிக்கும் இந்த செயலுக்கு ராஜஸ்தான் அரசு வெட்கப்பட வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே மக்கள் மீது அக்கறை இல்லாமல் ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு இந்த சட்டம் மிகவும் வசதியாகிப் போய்விடும் என்பதும் இவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால், ஆளும் பா.ஜ.க அரசோ அதிகாரிகளின் பணிகளைச் சரிவரச் செய்யவிடாமல் தடுக்கும் தீயசக்திகளுக்காகவே இதைச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளோம் என்று சொல்கிறது.
தற்போது இது ஒரு அவசரச் சட்டமாகவே இருக்கிறது. இன்னமும் குடியரசுத் தலைவர் கையில் தான் இதைச் சட்டமாக்கும் அதிகாரம் இருக்கிறது. அப்படி ஆகிவிட்டால், இந்திய இறையாண்மைக்கு எதிரான முடிவாக இது அமையும் என்கிற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.