குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு.. வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு... போலீஸ் குவிப்பு
குவஹாத்தி: குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து வடகிழக்கு மாணவர்கள் முன்னணி (நெசோ) 11 மணி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்க அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா,மிசோரம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட ஆறு வடகிழக்கு மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுளளது.
அண்டை நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் நீங்கலாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள் என உள்பட ஆறு சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் பயப்பட தேவையில்லை.. அமித்ஷா லோக்சபாவில் பேச்சு
நலனுக்கு எதிரானது
முன்னதாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. குடியுரிமை திருத்த மசோதா வடகிழக்கு மாநிலங்களின் நலனுக்கு எதிரானது என்று கூறி அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
11 மணி நேரம்
நேற்று மசோதா நிறைவேறியதையடுத்து அனைத்து மாணவர்கள் அமைப்புகள் இணைந்த வடகிழக்கு மாநில மாணவர்கள் முன்னணி (நெசோ) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது , வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை 5 மணிக்கு தொடங்கிய வேலை நிறுத்தம் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அசம்பாவிதத்தை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகலாந்துக்கு விலக்கு
இதனிடையே ஹார்ன்பில் திருவிழாவைக் கருத்தில் கொண்டு நாகாலாந்துக்கு மட்டும் பந்தின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படாது
முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வருவதால் வடகிழக்கு மாநில மக்களின் நலன் பாதிக்கப்படாது என்று உறுதி அளித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் அஸ்ஸாம், மேகாலயம், மிஸோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினா் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட வரம்புக்கு உள்பட்ட பகுதிகளுக்கு இந்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மணிப்பூர் சேர்ப்பு
இதேபோல், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிஸோரம் ஆகிய மாநிலங்களில் நுழைவு அனுமதி (இன்னா் லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் பகுதிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும். இதில், மணிப்பூா் மாநிலமும் இணைக்கப்படவுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார். வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் வடகிழக்கு மாநில மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறினார்.