பிரணாப் வருகையால் மாற்றம்.. ஆர்எஸ்எஸ்ஸில் சேர்பவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்வு
ஆர்எஸ்எஸ் இயக்க கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பேசியதை அடுத்து அந்த இயக்கத்தில் சேரும் நபர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: ஆர்எஸ்எஸ் இயக்க கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பேசியதை அடுத்து அந்த இயக்கத்தில் சேரும் நபர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழா சில வாரம் முன்பு நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜி சென்றிருந்தார். நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் பிறந்த இடத்தில் மரியாதை செலுத்தினார்.
பிரணாப்பிற்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுக்கப்பட்ட போதே காங்கிரஸ் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.ஆர்எஸ்எஸ் இயக்கம் பல திட்டங்களை வைத்து அவருக்கு அழைப்பு விடுத்து இருந்ததாக கூறப்பட்டது. பிரணாப் முகர்ஜி அந்த கூட்டத்திற்கு சென்றதும், அங்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதும் இந்திய அரசியலிலேயே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு ஆதரவாக பிரணாப் பேசியதை அடுத்து அந்த இயக்கத்தில் சேரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. அதன்படி முன்பு இருந்ததை விட 5 மடங்கு பேர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்க்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது .
பிரணாப்பின் வருகைக்கு முன்பு ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தினமும் சராசரியாக சுமார் 378 பேர் இணைந்திருக்கிறார்கள். ஆனால் அந்த விழாவிற்கு இந்த எண்ணிக்கை 5 மடங்காக உயர்ந்துள்ளது. ஜூன் ஆறுக்கு பின் சரியாக தினமும் சராசரியாக 1200 முதல் 1700 அந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறார்கள்.
ஆனால் பிரணாப் வந்ததால்தான் அவர்கள் இணைந்தார்கள் என்ற கருத்தை ஆர்எஸ்எஸ் மறுத்துள்ளது. ஆனால் இன்னொரு தரப்பு அவர் வந்ததால் ஆர்எஸ்எஸ் மீதுள்ள பார்வை மாறியுள்ளதாக கூறியுள்ளது.