சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி.. இணையதளத்தில் முன்பதிவு ஆரம்பம்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினசரி சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். பக்தர்கள் https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தரிசனத்திற்காக முன்பதிவு செய்யலாம்.
பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி வருகை தர வேண்டும். நிலக்கல் பகுதிக்கு வரும் 24 மணி நேரத்திற்கு முன்பாக கோவிட் 19 எதிர்மறை சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆய்வகத்திடமிருந்து பக்தர்கள் பெற்றிருக்க வேண்டும்.
இந்த மாதம் 26 ஆம் தேதிக்குப் பிறகு வருகை தரும் பக்தர்களுக்கு, 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி பிசிஆர் கொரோனா எதிர்மறை சான்றிதழ் தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான வசதிகள் நிலக்கலில் அமைக்கப்பட்டுள்ளன.