தமிழக விவசாயிகளை மோடி அலுவலகத்துக்கு அழைத்து சென்று ஏமாற்றிய போலீஸ் சஸ்பெண்ட்!
டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் இன்று நடத்திய நிர்வாணப் போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் இன்று நடத்திய நிர்வாணப் போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விவசாயிகளை பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்து சென்ற காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக விவசாயிகளின் துயர் துடைக்க அய்யக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கடந்த 14ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றன. எலிக்கறி உண்பது, பாம்புக்கறி உண்பது, சவம் போல் கிடப்பது, மண்டை ஓடு, மண்சட்டியை ஏந்துவது என நாள்தோறும் விதவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமரை சந்திக்க வைப்பதாக பிரதமர் அலுவலகத்துக்கு டெல்லி மந்தீர் மார்க் காவல்துறையினர் தமிழக விவசாயிகளை அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்றபிறகு பிரதமர் நாடாளுமன்றத்துக்கு சென்றுவிட்டதால் மனுவை கொடுத்துவிட்டு செல்லும் படி கூறியுள்ளனர்.
இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் விரக்தியில் ஆடைகளை களைந்து வெற்றுடம்புடன் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் பொய் சொல்லி அழைத்துச் சென்று ஏமாற்றியதாக கூறப்பட்டது. இந்நிலையில் விவசாயிகளை பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்து சென்ற காவலர் பகதூர் சிங்கை சஸ்பெண்ட் செய்து டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.