எங்களை பிரித்து விடாதீர்கள்.. 65 வயது கணவருடன் சேர்த்து வைக்குமாறு 20 வயது பெண் போலீசில் கதறல்
கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் போலீசில் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்: "வாழ்ந்தால் அவரோடுதான் வாழ்வேன், எங்களை பிரித்து விடாதீர்கள்" என்று ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை திருமணம் செய்த இளம்பெண் பஞ்சாப் போலீசில் கெஞ்சி அழுதுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன். 65 வயதான இவர் மனைவியை இழந்தவர். ஆனால் 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக இருந்தாலும் வீட்டில் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து கொண்டுவந்தார். அப்போது மகத் என்ற 20 வயது பெண் ஜெய்கிருஷ்ணனிடம் டியூஷன் படிக்க வந்தார்.
பதிவு திருமணம்
மகத்தை தலைமை ஆசிரியருக்கு பிரித்துபோய்விட்டதால், நிறைய உதவிகளை செய்திருக்கிறார். இந்த குணம் மகத்தை சுண்டி இழுக்க, அவர் மீது அதிகப்படியான பாசமும் ஏற்பட்டது. இது இருவருக்குள்ளும் காதலாக உருவானது. பின்னர் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். பெண் வீட்டில் எப்படியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் வீட்டை விட்டு ஓடிப்போய் ஒரு வருடத்திற்கு முன்பு ரிஜிஸ்டர் கல்யாணமும் செய்து கொண்டனர். இதற்கு நடுவில் பெண்ணை காணோம் என்று மகத் பெற்றோர் பஞ்சாப் போலீசில் புகார் அளித்தனர்.
கிடுக்கிப்பிடி உத்தரவு
அதோடு மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு மகத்தின் தந்தை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் அளித்துள்ளார். அதன்படி 72 மணி நேரத்தில் கோர்ட்டில் ஒப்படைக்க கோர்ட்டும் கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்தது. புகாரின் அதனடிப்படையில் போலீசார் தேடி வந்த நிலையில் ராமேசுவரத்தில் இளஞ்ஜோடிகள் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை பிடித்த போலீசார் பெற்றோருக்கும் தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்தனர்.
அவரோடுதான் வாழ்வேன்
மேலும் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கனவே நடைபெற்ற பதிவு திருமணத்தை பற்றி இருவரும் சொன்னார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மகத்தின் தந்தை, தன்னுடன் வந்துவிடுமாறு கதறினார். அதற்கு மகத், தன் அப்பாவிடம், "வாழ்ந்தால் நான் அவரோடுதான் வாழ்வேன், என் கணவரை என்னைவிட்டு பிரித்து விடாதீர்கள்" என்று கெஞ்சி அழுதார். ஆனால் போலீசாரும், பெற்றோரும் இந்த பொருந்தாத காதல் வேண்டாம் என்று அறிவுறுத்தியும் மகத் கேட்கவே இல்லை. அதனால் ஜெய்கிருஷ்ணனிடம் பேசிப் பார்த்தனர். அவரும் மகத்தை விட்டு பிரியவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.
ஒரே செல்ல மகள்
மகத்தின் தந்தை ஒரு வங்கி அதிகாரி. ஒரே பெண் வேறு. இதனால் செல்லத்தை கொட்டி வளர்த்துள்ளார். அதனால்தான் அவரால் இன்னமும் மகளை இழக்க மனமில்லாமல் அழுது கொண்டே இருக்கிறார். ஆனால் போலீசாரிடம் மகத் பேசும்போது, "எங்களை பஞ்சாப்புக்கு அனுப்பி விடாதீர்கள், எங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. என் காதல் தவறாக இருந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன். அவர் மீது அதிக பாசம் வைத்துவிட்டேன். நான் மேஜர் என்பதால் யாருடன் வாழ வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை எனக்கு இருக்கிறது" என்று அழுதவாறே கெஞ்சினார்.
கோர்ட் கெடு
ஆனாலும் கோர்ட் கெடு விதித்துள்ளதால், அதனை சொல்லி இருவரையும் ராமேஸ்வரம் போலீசாரும், பஞ்சாப் போலீசாரும் அழைத்து சென்று இருக்கிறார்கள். இனி கோர்ட் உத்தரவு வந்தால்தான் இந்த விவகாரம் என்ன ஆகும் என தெரியும்.