காதலர் தினத்தை பெற்றோர் தினமாக மாற்ற வேண்டும்.. பள்ளிகளுக்கு ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
காதலர் தினத்தை பெற்றோர் தினமாக மாற்ற வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்: காதலர் தினத்தை பெற்றோர் தினமாக மாற்ற வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தும் வகையில் பரிசு பொருட்களை பரிமாறிக்கொள்வார்கள்.
காதலர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வணிக நிறுவனங்கள் பல ஆஃபர்களை அறிவிக்கும். பார்க், தியேட்டர் என பொதுமக்கள் கூடும் இடங்களில் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை நிரம்பி வழியும்.
ராஜஸ்தான் அரசு உத்தரவு
இந்நிலையில் ராஜஸ்தான் அரசு காதலர் தினத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. அதாவது காதலர் தினத்தை பெற்றோர் தினமாக கொண்டாட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிப்.14 பெற்றோர் தினம்
அது குறித்து கல்வித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "அடுத்த ஆண்டு (2019) முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் பிப்ரவரி 14-ந் தேதி பெற்றோர் தினமாக கொண்டாட வேண்டும்.
மேற்கத்திய கலாச்சாரம்
அன்றைய தினம் தாய் மற்றும் தந்தைக்கு மாணவ, மாணவிகள் பூஜை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாசாரத்தில் ‘டீன் ஏஜ்' பருவத்தினர் தீவிரமாக உள்ளனர். இதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் கவுரவிப்பு
ராஜஸ்தான் அரசின் இந்த உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுவார்கள். பெற்றோர்களை அவர்களின் மகளோ அல்லது மகனோ கவுரவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடத்தைகளை அறியலாம்
அன்றைய தினம் பெற்றோர்கள் பள்ளியில் நீண்ட நேரம் தங்கியிருக்கலாம். ஆசிரியர்களை சந்தித்து தங்களது குழந்தைகளின் கல்வி மற்றும் நடத்தைகள் குறித்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.