உ.பி முதல்வர் ஆதித்யநாத்தின் திடீர் தாஜ்மகால் காதலுக்கு இதுதான் காரணமா ?
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் தாஜ்மகாலுக்கு திடீர் விசிட் செய்தார். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லக்னோ : உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் விசிட் அடித்தார். அங்கு தாஜ்மகால் வளாகத்தை கூட்டி சுத்தப்படுத்தினார். மேலும் 63 கோடிக்கு ஆக்ரா மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி உள்ளார்.
கடந்த சில மாதங்களாக தாஜ்மகால் குறித்த பல எதிர்மறையான கருத்துகள் பா.ஜ.க பிரமுகர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது நாட்டில் பல சர்ச்சைகளையும், விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது.
தாஜ்மகால் இந்திய வரலாற்றில் கறை என்றும், அதைக் கட்டியவர்கள் மோசமான கொலையாளிகள் என்றும், அது ஒரு இந்து கோவில் அதைத்தான் மொகலாயர்கள் மாற்றி அமைத்தார்கள் என்றும் சர்ச்சைக்கருத்துகள் வரிசை கட்டி வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பயணம் முக்கியமாக கருதப்படுகிறது. அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாவிற்காக ஆக்ரா வந்திருந்த ஸ்விட்சர்லாந்து தம்பதிகள் தாஜ்மகால் அருகே உள்ள பதேபூர் சிக்ரி ரயில் நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
அங்கு நடந்து சென்று கொண்டிந்த இருவர் மீதும் ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஸ்விட்சர்லாந்து அரசு இந்திய வெளியுறவுத்துறையின் மீது கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
தனது நாட்டு குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால், ஐரோப்பிய யூனியன் மூலமாக இந்திய சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்போவதாக ஸ்விட்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பர்க்ஹால்டர், இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்தே இந்த விஷயத்தில் மாநில அரசின் நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உ.பி மாநில அரசிடம் அறிக்கை கேட்டிருந்தார். இதற்குப் பிறகே யோகி ஆதித்யநாத்தின் தாஜ்மகால் வருகை திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
முதல்வர் தாஜ்மகால் வந்ததன் மூலம் அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், இனி அதுபோன்ற நடவடிக்கைகள் நடக்காது என்றும் மாநில அரசு அறிக்கை அனுப்பி உள்ளது. இந்திய சுற்றுலா வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு தாஜ்மகால் மூலம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.