’பத்மாவதி’ திரைப்படத்தில் அப்படி என்னதான் பிரச்னை ? எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள்
பத்மாவதி திரைப்படத்தை எதிர்ப்பதற்கான காரணங்களை போராட்டக்காரர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video
ஜெய்ப்பூர் : சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவும், எதிர்ப்பும் வலுத்துக்கொண்டே போகிறது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில், ராஜ்புத் வம்சத்தின் ராணி பத்மாவதியின் வரலாறு திரைப்படமாக்கப்பட்டு உள்ளது. இதில் ராணி பத்மாவதியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராஜ்புத்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இந்த படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
ராஜ்புத் மக்கள் அதிகம் வசிக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பா.ஜ.க ஆதரவு இயக்கங்கள் இந்தப்போராட்டத்தில் முன் நின்று நடத்துகிறார்கள். படத்தின் இயக்குநர் பன்சாலி, நடிகர்கள் ரன்பீர் கபூர், தீபிகா படுகோனுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த நிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் படத்திற்கு எதிர்ப்பும் ,ஆதரவும் வலுத்துவருகிறது. தங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் திரைப்படத்தை தங்கள் உயிரைக் கொடுத்தாவது தடை செய்வோம் என்று ராஜ்புத் கார்னி சேனா என்கிற அமைப்பு தீவிரமாக இயங்கி வருகிறது. இந்தப்படத்தை வெளியிட்டால் தீபிகாவின் மூக்கை அறுப்போம் என்றும் சபதம் எடுத்துள்ளனர். இந்தப்படத்தில் அப்படி என்ன தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது?
தீபிகாவின் கூமார் நடனம்
ராஜஸ்தான் திருமணங்களில் ஆடப்படும் 'கூமார்'எனும் நடனத்தை அரச குலப்பெண்கள் ஆடமாட்டார்கள். ஆனால், திரைப்படத்தில் ராணியாக வரும் தீபிகா அந்த நடனத்தை ஆடுவது போல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. உடலை மறைத்து ஆடவேண்டிய நடனத்தில் தீபிகா இடுப்பு தெரியும்படி ஆடி இருக்கிறார் அது தங்கள் மனதை புண்படுத்துவது போல இருக்கிறது என்று போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
பத்மாவதியோடு அலாவுதீன் கில்ஜி
எப்படியாவது பத்மாவதியை அடையவேண்டும் என்று நினைக்கும் வில்லனான அலாவுதீன் கில்ஜி கனவில் நெருக்கமாக அவரோடு ஆடிப்பாடும் படியான, பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. கருத்து சுதந்திரம் எனும் பேரில் இதுபோன்ற தவறான காட்சிகளை மக்கள் மனதில் விதைக்கப்பார்க்கிறார்கள் என்றும் இயக்குநர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
அனுமதி பெறாமல் படப்பிடிப்பு
ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் கோட்டைகளில் ராஜ்புத்களிடம் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாகவும், அதனை தட்டிக்கேட்க சென்ற தங்களை தகாத முறையில் பேசி அவமதித்ததால் தான் பிரச்னை நடந்ததாகவும் கார்னி சேனா அமைப்பு கூறுகிறது. மேலும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தச்சென்றவர்களையும் முறையாக நடத்தவில்லை என்று அவர்கள் இயக்குநர் மீது புகார் கூறுகிறார்கள்.
வட இந்தியாவில் அரச குடும்பம்
ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இன்னமும் அரச குடும்பத்தினருக்கு அதே மரியாதை வழங்கப்படுகிறது. தற்போதைய முதல்வர் வசுந்தர ராஜே குவாலியர் அரச குடும்பத்தில் பிறந்து, தோல்பூர் அரச குடும்பத்தின் மருமகளாக இருக்கிறார். ஒரு அரச குடும்ப வாரிசு ஆளும் மாநிலத்தில் ஒரு ராணியை எப்படி தவறாக சித்தரிக்கலாம் என்கிற அவர்களின் வாதமே தற்போது பிரதானமாக இருக்கிறது. இதனால் தான் அந்த திரைப்படம் எதிர்ப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.