சப்பாத்தியும், பெங்களூர் சிறுமி பலாத்காரமும்: சிவசேனை ஒப்பீடு
மும்பை: மராட்டிய சதனில் இஸ்லாமியருக்கு வேண்டுமென்றே சப்பாத்தியை ஊட்டியதாக சிவசேனை கட்சி எம்.பி ராஜன் விச்சார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த விமர்சனத்தை கண்டித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் விமர்சனம் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் "ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் மாதத்தில் மதகுரு ஒருவரால் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். இதே போல ரம்ஜான் மாதத்தில்தான், பெங்களூர் பள்ளியிலும், முஸ்தபா என்ற இஸ்லாமிய ஆசிரியர், 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
ஊடகங்கள் மற்றும் சுயநல அரசியல்வாதிகள் இதனை சொல்லமாட்டார்கள். சப்பாத்தி விவகாரம் தொடர்பாக, ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் காட்டும் அக்கறையை ரம்ஜான் மாதத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது ஏன் என்று கேள்வி எழுப்ப காண்பிக்கவில்லை.
சப்பாத்தி சம்பவத்திற்கு அரசியல் மற்றும் மத சாயம் பூச அரசியல்வாதிகள் முயற்சி செய்கின்றனர். சிவசேனை ஒவ்வொரு மதத்தையும் மதிக்கிறது.யாரேனும் மதத்தை பயன்படுத்தி எங்களை அவதூறாக பேசுகிறபோது அமைதியாக இருக்க மாட்டோம். இவ்வாறு சிவசேனை நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.