சுவை மிகுந்த உடுப்பி புளி சாதம்.. ஏன் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு தெரியுமா...?
டெல்லி: உடுப்பி பக்கம் போனால் வயிறு முட்ட முட்ட எவ்வளவு சாப்பிட்டாலும் இன்னும் இன்னும் என்று கேட்கத் தோன்றும். காரணம், உடுப்பி உணவு வகைகளில் புதைந்து கிடக்கும் ருசியும், தரமும்.
குறிப்பாக பிசி பேலே ஹுளி அன்னா (புளிச்சாதம்), சாறு (ரஸம்), மோதகா (கொழுக்கட்டை) மற்றும் ஹக்கி, மஜ்ஜிகே பலித்யா (மோர்க்குழம்பு), டிராக்சி கொஜ்ஜு ஆகியவை செம டேஸ்ட்டானவை.
இந்த உணவு வகைகள் உடுப்பி பக்கத்தைச் சேர்ந்த மத்வா பிராமணர்களின் ஸ்பெஷல் வகை உணவுகளாகும். இதைச் சாப்பிட்டவர்களுக்கு மீண்டும் மீண்டும் இந்த ருசி கேட்கும்.
கடலோர உடுப்பி
கர்நாடகத்தின் கடலோரப் பகுதியில் ஒன்றுதான் உடுப்பி. மதத்திற்கும், சாப்பாட்டுக்கும் பெயர் போனது உடுப்பி. உடுப்பி கிருஷ்ணன் கோவில் ஒரு பிரபலம் என்றால், இங்குள்ள மத்வா பிராமணர்களின் உணவு வகைகள் இன்னொரு பிரபலமாகும்.
சைவத்தின் சிறப்பு
உடுப்பி சைவச் சாப்பாட்டின் தனிச் சுவைக்கும், தரத்திற்கும் என்ன காரணம் என்பதை சமையல் கலை நிபுணர் மாலதி சீனிவாசன் மற்றும் கீதா ராவ் ஆகியோர் தங்களது "The Udupi Kitchen." என்ற நூலில் வெளியிட்டுள்ளனர்.
விதம் விதமான உணவு வகைகள்
இந்த நூலில் உடுப்பி உணவு வகைகள் குறித்த விவரத்தையும், அதன் செய்முறைகளையும் அழகுற சொல்லியுள்ளனர் இருவரும். நறுமணப் பொடிகள், சாலட், சட்னி, டெசர்ட் வகை உணவுகள், ஸ்னாக்ஸ் குறித்து இதில் விவரித்துள்ளனர்.
பிசி பேலே ஹுளி அன்னா
மேலும் உடுப்பியில் மிகவும் பிரபலமான பிசி பேலே ஹுளி அன்னா, சாறு, மசால் தோசை, மோதகா உள்ளிட்டவற்றில் அடங்கியுள்ள பல ரகசியங்களையும் இவர்கள் தங்களது புத்தகத்தில் தெரிவித்துள்ளனர்.
உடுப்பிக்குப் பெயர் போன காய்கறிகள், பழங்கள்
உடுப்பி வகை உணவுகளின் தனிச் சுவை இருப்பதற்கு முக்கியக் காரணமாக இவர்கள் கூறுவது, இப்பகுதியிலேயே விளையும் பிரத்யேகமான காய்கறிகள், பழங்கள், தானியங்கள்தானாம். அதனால்தான் தனிச் சுவை கிடைக்கிறதாம்.
வெங்காயம், பூண்டுக்கு இடமில்லை
பொதுவாகவே பிராமணர்களின் சமையலில் வெங்காயம், பூண்டுக்கு இடம் இருக்காது. உடுப்பியிலும் அதே கதைதான். இப்பகுதிக்கு வேறு எங்கிருந்தும் காய்கறிகள், பழங்கள் வருவதில்லையாம். இப்பகுதியில் விளையும் காய்கறிகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்களாம்.
100 சமையல் குறிப்புகள்
தனது புத்தகம் குறித்து மாலதி சீனிவாசன் கூறுகையில் நான் மிகுந்த ஆய்வுகள் செய்து 175 ரெசிப்பிகளைத் தொகுத்தேன். இருப்பினும் அதிலிருந்து 100 ரெசிப்பிகளை மட்டுமே புத்தகத்தில் கொடுத்துள்ளேன்.
உணவு இங்கு மதம்
உடுப்பி மக்களைப் பொறுத்தவரையில் உணவு என்பது அவர்களுக்கு மதம் போல. அப்படி நேசிப்பார்கள், மதித்து உண்பார்கள். அப்படிப்பட்டவர்கள் உணவுகளை எப்படி ரசனையாக சமைப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றார் மாலதி சீனிவாசன்.
முடிந்தால் புத்தகத்தை வாங்கிப் படித்து சமைத்தும் பாருங்கள்.. செம டேஸ்ட்டாக இருக்கிறது படிக்கும்போதே.