ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இப்ப எப்படி இருக்கு... போலீஸ் வெளியிட்ட சூப்பர் தகவல்
ஸ்ரீநகர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் மூன்று பிராந்தியங்களிலும் ஒட்டுமொத்தமாக அமைதியான சூழலே காணப்படுவதாக அம்மாநில டிஜிபி தல்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன அமர்வின் 370வது பிரிவினை மத்திய அரசு ரத்து செய்து நேற்று அறிவித்தது. மேலும் 35ஏ பிரிவையும் ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிடும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் ஸ்ரீநகர், ஜம்மு உள்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்ரீநகர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான பின்னர் எந்தவிதமான வன்முறைகளோ அசம்பவித சம்பவங்களோ நிகழவில்லை. மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. மொத்த காஷ்மீரிலும் அமைதியான சூழலே நிலவுகிறது என்று அம்மாநில காவல்துறை டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் தொலைப்பேசி மற்றும இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவசர வேலைகளுக்காக வெளியில் செல்வோருக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றும் ஸ்ரீநகர் காவல்துறை துணை ஆணையர் ஷாகித் இக்பால் சவுத்ரி தெரிவித்தார்.