கேரளாவில் 5 நாட்கள் தாமதமாக துவங்குகிறது தென்மேற்கு பருவமழை.. இந்திய வானிலை மையம் தகவல்
டெல்லி: கேரளாவில் வரும் 6-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டாவது ஜூன் 1-ம் தேதியான இன்று தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்று தாமதமாக வரும் 6-ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம். இது பற்றி பேசிய இந்திய வானிலை மைய மூத்த அதிகாரியான மகோபத்ரா, கேரளாவில் சரியாக ஜூன் 6-ம் தேதி பருவமழை துவங்கும். பருவமழை குறித்து இந்திய வானிலை மையம் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார்.
பருவமழை துவங்குவதையொட்டி அரபிக்கடல் பகுதியில் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர் இந்திய பெருங்கடல், அரபி கடல், வங்க கடல் ஆகியவற்றிலும், பசிபிக் பெருங்கடலிலும், சாதகமான சூழல்கள் உருவாகியுள்ளது. இதனால் இந்திய பகுதிகளை நோக்கி மேகக் கூட்டங்கள் நகர தொடங்கியுள்ளதாக கூறினார்.
கடந்த 18-ம் தேதி அந்தமானில் துவங்கிய, தென் மேற்கு பருவ மழை படிப்படியாக வலுப்பெற்றது. அந்தமானின் வடக்கு பகுதிக்கு பரவியது. அரபி கடலில் இருந்து தென் மேற்கு பருவக்காற்றும் வலுவாக வீச துவங்கியுள்ளது. இதனையடுத்து கேரளாவை நோக்கி மேக கூட்டங்களும் வர துவங்கி உள்ளன.
இதனால் வரும் நாட்களில் கேரளா மற்றும் தமிழக - கேரள எல்லை பகுதிக்குள், பருவ மழை நுழையும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக பல மாநிலங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலோடு, வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாடும் சேர்ந்து கொண்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை தண்ணீர் தேவையால் பல இடங்களில் முடங்கியுள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை வஞ்சித்ததால், பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலத்தடி நீர் அடிமட்டத்திற்கு சென்று விட்டது.
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடப்பாண்டில் 96 சதவீதம் அளவிற்கு மழை பொழிவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் 97 சதவீத அளவும், வடமேற்கு இந்தியாவில் 94 சதவீத அளவும், மத்திய இந்தியாவில் 100 சதவீத அளவும் மழைப்பொழிவு இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கினால் குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் குறிப்பிட்ட தகுந்த அளவு மழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.