மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை? வேதாந்தா தொடர்ந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் நாளை விசாரணை!
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 22ஆம் தேதி 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.
அப்போது ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
13 பேர் சுட்டுக்கொலை
இதனை தடுக்க முயன்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தொடர்ந்து 2 நாட்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வழக்கு விசாரணை
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஸ்டெர்லைட்டுக்கு சீல்
மக்களின் தொடர் போராட்டம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே மாதம் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலைக்கு வழங்கப்படும் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவற்றின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
வேதாந்தா மனு
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி அதன் நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அரசாணைக்கு எதிராக மனு
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமம் இந்த மனுவை தாக்கல் செய்தது.
எகிறியுள்ள எதிர்பார்ப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.