'சிறையுலக தாதா' ஆசாராம் பாபு.. தொடர்ந்து வேட்டையாடப்படும் அப்பாவி சாட்சிகள்... ஓயாத மரண ஓலம்
டெல்லி: சிறுமி பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவுக்கு எதிரான சாட்சிகள் ஒவ்வொருவராக திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையே இந்த படுகொலைகளுக்கு உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சாட்சிகளின் மரண ஓலங்கள் தொடர் கதையாகிவருகின்றன.
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு 2013ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார்... அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் ஒரு சாட்சி மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதுவரை ஆசாராம் பாபு வழக்கின் சாட்சிகள் 9 பேர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். யார் இந்த ஆசாராம் பாபு? இவரது பின்னணி என்ன?
டீ விற்பனையாளர்
1950களின் இறுதியில் டீ விற்றுக் கொண்டிருந்த நபர்தான் ஆசாராம் பாபு.. அப்போது கொலை வழக்கில் ஒன்று சிக்குகிறார்.. பின்னர் போதுமான சாட்சிகள் இல்லை எனக் கூறி விடுவிக்கப்படுகிறார்.. அதன் பின்னர் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி சாராயம் காய்ச்சுகிற நபராக உருவெடுக்கிறார்..
2008 ஆம் ஆண்டு முதல்
1972களில் பிரசங்கங்களைத் தொடங்குகிறார்.. கடந்த 43 ஆண்டுகளாக உலகம் முழுவதும் தம்மை ஒரு சாமியாராக்கிக் கொண்டு பிரசங்கங்களை நிகழ்த்தி வருகிறார்.. தற்போது ஆசாராம் பாபுவுக்கு மொத்தம் 12 நாடுகளில் சுமார் 2 கோடி பேர் சீடர்களாக இருக்கிறார்களாம். இந்த சாமியாரின் மறுபக்கங்கள் 2008ஆம் ஆண்டு முதல் அம்பலமாகத் தொடங்கியது..
மர்ம மரணங்கள்..
அவரது ஆசிரமத்தின் ஆற்றங்கரையில் 2 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த அந்த சம்பவத்தில் இருந்துதான் ஆசாராமின் லீலைகள் வெளி உலகுக்கும் தெரியவந்தது.. இவர்களைத் தொடர்ந்து ஆசாராம் பாபு நடத்தும் பயிற்சி மையம் ஒன்றில் 2 குழந்தைகள் குளியலறையில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவமும் வெளி உலகுக்குத் தெரியவந்தது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஆசாராம் பாபு ஆசிரமத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர்தான் அங்கே நடக்கும் அத்தனை சட்டவிரோத காரியங்களையும் பகிரங்கப்படுத்தினார்.. அவருக்கு ஆசாராம் பாபு ஆதரவு கோஷ்டிகள் மிரட்டல் விடுத்து வந்த நிலையில் 2 மாதங்கள் கழித்து அந்த ஊழியர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பலாத்கார வழக்கில் சிறை
2013ஆம் ஆண்டு 16 வயது சிறுமி, ஆசாராம் பாபு மீது பலாத்கார புகாரைக் கூறியது. இந்த வழக்கில்தான் ஆசாராம் பாபு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு எதிரான சாட்சியங்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டும் சுட்டுக் கொல்லப்பட்டும் வருகின்றனர். ஆசாரம் பாபுவால் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் வயது சான்றிதழை வெளியிட்ட பள்ளி முதல்வருக்கு துப்பாக்கிக் குண்டுகளை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்தனர். அந்த பெண்ணுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
தொடர் படுகொலைகள்
மறுபுறம் ஆசாராம் தொடர்புடைய ஆவணங்களை அழிக்க முயன்றதாக ஒருவன் கைது செய்யப்பட்டான். 2014ஆம் ஆண்டு ஆசாராம் பாபுவின் மகனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சகோதரிகளில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் ஆசாராம் பாபுவின் ஆசிரம முன்னாள் ஊழியர் ஒருவர் ஆசிட் வீச்சுக்குள்ளானார். அவருடன் 12 ஆண்டுகாலம் பணிபுரிந்தவர் சுட்டுக் கொல்லபட்டார்.
இந்த ஆண்டு ஜனவரி 11-ந் தேதியன்று ஆசாராமின் சமையல்காரராக 9 ஆண்டுகாலம் இந்த அகில் குப்தாவும் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜஸ்தான் ஜோத்பூரில் பிப்ரவரி மாதம் ஒரு சாட்சி நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
நானே பொறுப்பு என நக்கல்
கடந்த மே மாதம் கூட, ஆசாராம் பாபுவின் மகனுடைய முன்னாள் உதவியாளரும் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சியுமான நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் நீதிபதிகள் ஆசாராம் பாபுவிடம் கேட்கிற போது, ஆமாம் உலகத்துல நடக்குற எல்லா தாக்குதல்களுக்கும் நானே பொறுப்பு என்று நக்கலடித்திருக்கிறார்.
பயங்கர ஆயுதங்கள்..
இப்படியான தாக்குதல்களுக்கு காரணமான 10 நபர்கள் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு வழக்கறிஞரும் அடங்குவார்.. இந்த நபர்களிடம் இருந்து கத்திகள், ஆசிட் பாட்டில்கள், லேசர் துப்பாக்கி என பல பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று கிர்பால்சிங் என்ற சாட்சி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிறைக்குள்ளே இருந்து கொண்டும் வெளியே நடமாடுகிற சாட்சிகளை 'போலீஸ்' துணையோடுதான் அவரது ஆதரவாளர்கள் 'வேட்டையாடி' வருகின்றனர்... இதனால் ஆசாராம் பாபுவுக்கு எதிரான சாட்சிகள் உயிருக்கு பயந்து போய் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து போய் உள்ளனர்.
ஆசாராம் பாபுவுக்கு தண்டனை கிடைக்கும் வரையில் இந்த சாட்சிகளின் மரண ஓலங்கள் தொடர் கதையாகும் எனில் ஜனநாயகத்தை பற்றிய மதிப்பீடு மாறத்தான் செய்யும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.