அத்தனை கைகளும் ஒன்றிணைந்தால்.. தாமரை மறையும்.. 5 மாநில தேர்தல் உணர்த்தும் பாடம்!
டெல்லி: 5 மாநிலங்களின் தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கை கொண்டுள்ளன.
திமுக, தெலுங்கு தேச கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் என 21 கட்சிகள் ஒன்றிணைந்து பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக அணி திரண்டுள்ளன.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் தெலுங்கானா, மிசோரம் தவிர மற்ற மூன்று மாநிலங்களில் கூட்டணி கட்சிகளின் ஆதரவால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
ம.பியில் திடீர் திருப்பம்.. பின்வாங்கிய அமித் ஷா.. பல்டி அடித்த பாஜக!
கை கொடுத்த கட்சிகள்
மத்தியபிரதேசத்தில் இழுபறி நீடித்து வந்த நிலையில், 114 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்க 1 இடத்தில் வென்ற சமாஜ்வாடி, 2 இடங்களை பெற்ற பகுஜன் சமாஜ்வாடி கட்சிகள் கை கொடுத்துள்ளன. இதே போன்ற நிலை ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில தேர்தல்களிலும் ஏற்பட்டது.
புதிய பாதை
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, பல்வேறு யுக்திகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல்களில் மாநில கட்சிகளுக்கு ஆதரவளித்து வெற்றிக்கு வழிவகுக்கவும், அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதரவை பெறுவதுமாக காங்கிரஸ் புதிய பாதையில் பயணத்தை தொடர்ந்து வருகிறது.
கூட்டணி பலம்
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள குளறுபடிகளை கண்காணித்து வரும் காங்கிரஸ், அதற்கு ஏற்ப திட்டங்களை வகுத்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மாநில எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என கூறிய போதிலும், ராகுல் காந்தி அதனை சமாளித்து கூட்டணியை வலுப்படுத்தி வருகிறார். உத்தரபிரதேசத்தில் எலியும், பூனையுமாக உள்ள சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்வாடி கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.
பாஜக குழப்பம்
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பதிலடி தர எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. அதே நேரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்று இருப்பது விரிசலை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காங்கிரஸ்க்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக, மூன்று மாநில தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பாஜக விழித்துக் கொண்டால் முடிவுகள் மாறும் என்றும் கூறப்படுகிறது.